1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: புதன், 31 ஜூலை 2019 (21:39 IST)

சித்தார்த்தாவின் கஃபே காஃபி டே மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியது எப்படி?

இம்ரான் குரேஷி
 
வி.ஜி.சித்தார்த்தா
 
புதன்கிழமை காலை மங்களூரில் உள்ள நேத்ராவதி ஆற்றின் அருகே கஃபே காஃபி டேயின் நிறுவனர் வி.ஜி.சித்தார்த்தாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தேநீர் அருந்துவதில் ஆர்வமாக இருந்த இளம்வயது இந்தியர்களை காஃபியை நோக்கி திருப்பிய 59 வயதான சித்தார்த்தாவின் பங்கு மிகவும் முக்கியமானது.
தென் இந்திய உணவகங்கள் விற்கும் பொதுவான காஃபியைவிட வித்தியாசமான முறையில் கஃபே காஃபி டேயின் தயாரிப்புகள் இருந்த நிலையில், தங்களின் சகபோட்டியாளரான ஸ்டார்பக்ஸ் போன்ற புதிய காஃபி குழுமத்தைவிட தங்களின் கிளைகளை நாட்டின் அனைத்து இடங்களிலும் கஃபே காஃபி டே தொடங்கியது.
 
இதுவே கஃபே காஃபி டே இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக காரணமாக அமைந்தது.
 
இந்தியாவில் காஃபி பயன்பாட்டை அதிகரிப்பது மற்றும் சர்வதேச காஃபி சந்தையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளால் பெரிதும் பாதிப்படையும் இந்திய காஃபி உற்பத்தியாளர்களுக்கு உத்வேகம் அளிப்பதும் சித்தார்த்தாவின் முக்கிய நோக்கங்களாக இருந்து வந்தன.
 
''இந்தியாவில் காஃபி பயன்பாடு மற்றும் காஃபி அருந்தும் பழக்கம் அதிகரித்ததற்கு சித்தார்த்தா தனி பெரும் காரணமாக இருந்தார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த காலகட்டத்தில் இந்தியாவின் காஃபி உற்பத்தியாளர்கள் ஏற்றுமதி சந்தை மற்றும் காஃபி சந்தையில் பொதுவாக நிலவும் சமச்சீரற்ற தன்மையால் பாதிப்படைந்தது வெகுவாக மாறியது அவரால்தான்,'' என்று பிபிசியிடம் சித்தார்த்தா குறித்து நினைவுகூர்ந்தார் இந்திய காஃபி போர்ட் அமைப்பின் துணை தலைவரான டாக்டர் எஸ் எம் காவேரப்பா.
 
மேலும், ''சில ஆண்டுகளாக, உள்நாட்டில் காஃபி பயன்பாடு ஆண்டுக்கு இரண்டு சதவிகிதம் அதிகரித்தது. இது சாத்தியமானதற்கு நிச்சயமாக சித்தார்த்தாவுக்கு பெரும் பங்கு உண்டு'' என்று காவேரப்பா கூறினார்.
 
குடகு காஃபி உற்பத்தியாளர்கள் கூட்டு விற்பனை மையத்தின் தலைவரான தேவய்யா கூறுகையில், ''சில ஆண்டுகளுக்குமுன், நான் வைஷ்ணவி தேவி ஆலயத்துக்கு சென்றபோது என்னால் 5 ரூபாய்க்கு காஃபி குடிக்க முடிந்தது'' என்று கூறினார்.
 
கர்நாடகாவின் சிக்மங்களூரில் ஒரு காஃபி உற்பத்தியாளர் குடும்பத்தை சேர்ந்த சித்தார்த்தா, மங்களூர் பல்கலைக்கழகத்தில் தனது கல்வியை முடித்தார்.
 
கர்நாடகாவில் உள்ள மல்நாட் பகுதியில் இருந்து பலரும் மும்பைக்கு தங்கள் கல்வி, வணிகத்துக்கு செல்வதுபோல சில ஆண்டுகள் சித்தார்தாவும் மும்பைக்குச் சென்றார்.
 
சில ஆண்டுகள் கழித்து பெங்களூரு திரும்பிய அவர், நிதி முதலீடு தொடர்பான ஒரு நிறுவனத்தை நிறுவனத்தில் பணிபுரிந்தார். பின்னர் தனது சொந்த நிறுவனமான சிவன் செக்யூரிட்டிஸ் நிறுவனத்தை தொடங்கினார்.
 
சித்தார்த்தா, 1996ஆம் ஆண்டு சிசிடியின் முதல் கிளையை பெங்களூருவின் மிக பரபரப்பான பிரிகேட் சாலையில் திறந்தார். அது பெங்களூருவில் தகவல் தொழில்நுட்ப புரட்சி தொடங்குவதற்கான காலம். இன்றுபோல் அப்போது இணையம் அனைவருக்கும் இலவசமாக கிடைக்கவில்லை.
 
இணைய வசதி மற்றும் ஒரு கப் காஃபி என்பது அப்போது அனைவருக்கும் உத்வேகமான ஒரு அனுபவமாக இருந்தது. ஒரு மணிநேரத்துக்கு ஒரு கப் காஃபி 60 ரூபாய். அதன்பின், 2001ஆம் ஆண்டு சித்தார்த்தாவின் வர்த்தக கூட்டாளி நரேஷ் மல்ஹோத்ரா அவருடன் இணையும் வரை பெங்களூரு நகரத்தின் பல இடங்களில் சிசிடி தொடங்கப்பட்டது.
 
அதன்பின், சிசிடி நாடுமுழுவதும் தொடங்கப்பட்டது. "அமிர்தசரஸ் மக்கள் தங்கள் காலை உணவில் தேநீருக்கு பதில் காஃபி அருந்த வேண்டும் என்று மல்ஹோத்ரா விரும்பினார்," என கூச்ச சுபாவம் கொண்ட சித்தார்த்தா செய்தியாளர் ஒருவரிடம் தெரிவித்தார்.
 
இன்று சிசிடி, சமூகத்தில் அனைத்துவித மக்களுக்கும் சந்திப்பு இடமாக மாறியுள்ளது. இளைஞர்களின் தொழில்ரீதியான சந்திப்புகள், திருமண ஏற்பாடுகளுக்கான சந்திப்புகள் மற்றும் பணி ரீதியிலான சந்திப்புகள் என அனைத்தும் அங்கு நடைபெறுகின்றன.
 
"ஒரு கட்டடத்தில் சிசிடி இருந்தால் அது அங்குள்ள பிற வர்த்தகத்தையும் ஈர்க்க கூடியதாக இருக்கும்," என பெயர் வெளியிட விரும்பாத ரியல் எஸ்டேட் தரகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
"சித்தார்த்தா இன்று அவரின் உறவினர்கள் மற்றும் நூறு வருடங்களுக்கும் மேலாக அவரின் குடும்பத்துக்கு சொந்தமான காஃபி தோட்டம் இருக்கும் அவரின் கிராம மக்களுடன் இன்னும் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார்," என அந்த தோட்டத்துக்கு அருகில் காஃபி தோட்டம் வைத்திருக்கும் செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
Image caption
தனது நிறுவன பணியாளர்களுக்கு சித்தார்த்தா எழுதிய கடிதம்
"அவர் ஒரு நல்ல மனிதராகவே அனைவரிடத்திலும் அறியப்படுகிறார். ஆனால், சிசிடியின் கிளையை தொடங்கும்போது, அதில் உள்ள சாதக பாதகங்களை சிந்திக்காமல் செயல்பட்டுவிட்டார். உதாரணமாக, எனது நண்பர் யாரும் அதிகம் வராத சில இடங்களில்கூட கிளைகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்," என்கிறார் கவேரப்பா.
 
2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிசிடி 1,814 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மைண்ட் ட்ரீ கன்சல்டிங்கில் இருந்த தனது பங்கை எல்&டியிடம் விற்றபோது, 2,858 கோடிகள் லாபம் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டது. 2017ஆம் ஆண்டு சித்தார்த்தாவின் அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது.
 
சித்தார்த்தா முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன்.
 
"காஃபி பயிரிடுபவர்களுக்கு தனது வர்த்தகத்தின் மூலம் உதவிய சித்தார்த்தா ஏன் சோர்ந்து போக வேண்டும்," என கேள்வி எழுப்புகிறார் தேவய்யா.
 
யார் இந்த முத்துலட்சுமி ரெட்டி? - இந்த 7 தகவல்களை அறிவீர்களா?