வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : புதன், 31 ஜூலை 2019 (19:00 IST)

பாஜக எம்.எல்.ஏ. மீது வன்புணர்வு புகார்: உன்னாவ் பெண்ணின் கடிதம் பற்றி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் கேள்வி

பாஜக எம்.எல்.ஏ.வால் வன்புணர்வு செய்யப்பட்டதாக சொல்லப்படும் பெண் தாம் ஆபத்தில் இருப்பதாகத் தெரிவித்து உச்சநீதிமன்றத்துக்கு அனுப்பிய கடிதத்தை தங்கள் முன் சமர்ப்பிக்காதது ஏன் என்று உச்சநீதிமன்ற தலைமைச் செயலாளரிடம் கேள்வி எழுப்பியுள்ளார் இந்தியத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்.


 
இன்று புதன்கிழமை நீதிமன்றத்தில் பேசிய ரஞ்சன் கோகோய், "உன்னாவ் வன்புணர்வு வழக்கில் பாதிக்கப்பட்டவர் உச்சநீதிமன்றத்துக்கு கடிதம் எழுதியது தொடர்பாக இன்று காலை செய்தித்தாளில் படித்தேன். இந்தக் கடிதம் குறித்து நேற்று தகவல் சொல்லப்பட்டது. அந்தக் கடிதத்தை இன்னும் நான் பார்க்கவில்லை. என்னிடம் அந்தக் கடிதம் இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை" என்று கூறினார்.
 
குற்றம்சாட்டப்பட்ட பாஜக எம்.எல்.ஏ.குல்தீப் சேங்கர்
அத்துடன் "அழிவும், நிச்சயமற்ற தன்மையும் நிலவும் சூழ்நிலையில் நாம் ஆக்கபூர்வமாக ஏதாவது செய்ய முயல்வோம்" என்று அவர் கூறினார்.
 
உன்னாவ் வன்புணர்வு வழக்கு, லாரிய மோதிய நிகழ்வுபற்றி விரிவாகப் படிக்க:


 
பாஜக எம்.எல்.ஏ. மீது வன்புணர்வு புகார் தந்த பெண்ணின் கார் மீது லாரி மோதி 2 பேர் பலி
 
உத்தரப்பிரதேச மாநில அரசு பதிலளிக்கவேண்டும் என்று கோரலாம் என்று மூத்த வழக்குரைஞர் வி.கிரி ஆலோசனை கூறினார். போஸ்கோ சட்டம் தொடர்பாகத் தரப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் ஏதும் பின்பற்றப்படவில்லை என்று தெரிகிறது என்று மேலும் தெரிவித்தார் கிரி.
 
வழக்கு என்ன?
உன்னாவ் சட்ட மன்ற உறுப்பினரான பாஜகவை சேர்ந்த குல்தீப் சிங் சேங்கர் வீட்டுக்கு வேலைக்கு சென்ற இளம் பெண் ஒருவர், தம்மை சேங்கர் வன்புணர்வு செய்ததாக 2017-ல் குற்றச்சாட்டு வைத்தார்.
 
இந்நிலையில் ஆயுதம் வைத்திருந்ததாக அவரது தந்தை கைது செய்யப்பட்டார்.
 
இந்த வழக்கில் நடவடிக்கை கோரி அந்தப் பெண் உ.பி. முதல்வர் யோகி ஆதித்தய நாத் வீட்டின் முன்பு தீக்குளிக்க முயன்றார்.
 
அதற்கு மறுநாள் போலீஸ் காவலில் இருந்த அவரது தந்தை இறந்தார். குற்றம்சாட்டப்பட்ட எம்.எல்.ஏ.வின் தம்பி அவரை தாக்கியதாகக் கூறப்பட்டது.
 
இதையடுத்து எம்.எல்.ஏ. சேங்கர் கைது செய்யப்பட்டார்.
 
இந்த பாதிக்கப்பட்ட பெண் சென்ற கார் மீது சில தினங்களுக்கு முன்பு உத்தரப் பிரதேச மாநிலம் ரே பரேலி அருகே லாரி மோதியதில் அவரது உறவினர் பெண்கள் இருவர் கொல்லப்பட்டனர். அந்தப் பெண்ணும் அவரது வழக்குரைஞரும் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


 
கார் மீது மோதிய லாரியின் பதிவு எண் கருப்பு பெயிண்டால் சிதைக்கப்பட்டிருந்தது.
 
முதலில் இது விபத்து என்று போலீஸ் கூறியது. எனினும், பிறகு, குற்றம்சாட்டப்பட்ட பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் சேங்கர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.