1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 6 ஏப்ரல் 2020 (15:35 IST)

கொரோனா வைரஸ்: "பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குபவருடன் முடக்கநிலை காலத்தில் நான் சிக்கிக் கொண்டேன்"

உலகின் பெரும்பாலான பகுதிகள் கொரோனாவால் முடக்கநிலைக்கு வந்துவிட்ட நிலையில், வீடுகளில் பாலியல் அத்துமீறல்களுக்கு ஆளாகும் நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் துன்பங்கள் இந்த நோய்த் தொற்று காலத்தில் மறைக்கப்படும் விஷயமாகவே இருந்துவிடக் கூடிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

பிரிட்டனில் தேசிய பாலியல் அத்துமீறல் ஹாட்லைன் தொலைபேசிக்கு இந்த வாரம் வந்த அழைப்புகளின் எண்ணிக்கை 65 சதவீதம் அதிகரித்துள்ளது என்று வீடுகளில் நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் குறித்த இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதி ஆணையாளர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், ஏழை நாடுகள் மற்றும் சிறிய வீடுகளில் வாழும் மக்கள் இதுபோன்ற அத்துமீறல்களை வெளியில் சொல்வதற்கான வாய்ப்புகள் குறைவு என்று ஐ.நா. மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த முடக்கநிலை காலத்தில் தங்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் ஆண்களுடன் தாங்கள் சிக்கிக் கொண்டிருப்பதாகக் கூறும் இரண்டு பெண்களுடன் பிபிசி பேட்டி எடுத்தது.

கீதா, இந்தியா

கொரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்க இந்தியாவில் 21 நாள் முடக்கநிலை அறிவிப்பதற்கு ஒரு நாள் முன்னதாக இந்தப் பேட்டி எடுக்கப்பட்டது.

கீதா அதிகாலை 5 மணிக்கு எழுந்து கொள்கிறார். அவருடைய கணவர் தரையில் அவருக்கு அருகில் படுத்திருக்கிறார். சப்தமாக குறட்டை விட்டுக் கொண்டிருக்கிறார்.

முந்தின நாள் இரவு குடித்துவிட்டு, மன அதிர்ச்சியுடன் அவர் வந்திருந்தார். கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்ட பிறகு பொதுப் போக்குவரத்தை சிலர் மட்டுமே பயன்படுத்துகின்றனர். எனவே ஆட்டோ அல்லது ரிக்ஷா ஓட்டுநரான விஜயின் தினசரி வருமானம் ரூ.1,500ல் (£16-க்கும் சற்று அதிகம் ) இருந்து ரூ.700 ஆகக் குறைந்துவிட்டது.