வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 30 மார்ச் 2021 (23:24 IST)

கொரோனா வைரஸ்: அமெரிக்கா ஆபத்தை எதிர்கொள்ளலாம் - எச்சரிக்கும் மூத்த விஞ்ஞானி

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து மருத்துவமனைகளில் சேரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், வரும் காலத்தில் அமெரிக்கா எதிர்கொள்ளவிருக்கும் ஆபத்து குறித்து அந்நாட்டு அரசை எச்சரித்துள்ளார் ஒரு மூத்த விஞ்ஞானி.
 
மாகாணங்களில் அனைவரும் முக கவசம் அணிவதை கட்டாயமாக்குமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நேற்று மாகாண அரசியல் தலைவர்களிடம் வலியுறுத்தினார்.
 
ஏப்ரல் மத்திக்குள், சிறார் வயதை கடந்த அமெரிக்கர்களில் 90 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என உறுதியளித்துள்ளார் பைடன்.
 
கடந்த வாரம் முழுக்க, நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 60,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்.
 
இந்த நிலையில், "நான் மீண்டும் வரவிருக்கும் அழிவைக் குறித்து பேசப் போகிறேன்" என ராஷெல்லி வலென்ஸ்கி கூறினார். இவர் அமெரிக்க பொது சுகாதாரத்துறையின் தலைமை அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
 
"கொரோனா வைரஸ் விவகாரத்தில் நாம் நம்பிக்கையோடு இருக்க பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால் நான் இப்போது பயத்தில் இருக்கிறேன்" என்று அவர் கூறினார்.
 
கொரோனா
 
கடந்த வாரம் நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 60,000-ஐத் தொட்டது. இது நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தரவுகள் படி 7 சதவீதம் உயர்வு.
 
ஐரோப்பிய நாடுகளில் நடந்தது போல, அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும், கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடாது என்றே விரும்புகிறேன் என கூறினார் வலனெஸ்கி.
 
"ஜோர்ஜா மாநில புதிய சட்டம் கருப்பின மக்கள் வாக்களிப்பதை அதிகம் தடுக்கும்": பைடன் கடும் எதிர்ப்பு
 
91,500 சில்லறை காசுகளாக கடைசி சம்பளம்: அமெரிக்காவில் ஊழியரை கடுப்பாகிய 
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மிஷிகன், கனெக்டிகட், நியூயார்க், அமெரிக்காவின் வட கிழக்கு பகுதிகளில் தான் குறிப்பாக அதிகரித்திருக்கிறது.
 
மக்கள் அனைவரும் முக கவசம் அணிவதைக் கட்டாயமாக்கும் சட்டத்தை மீண்டும் கொண்டு வர, மாகாண ஆளுநர்களிடம் வெள்ளை மாளிகையில் இருந்து பேசிய போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வேண்டுகோள் வைத்தார்.
 
கொரோனா விதிமுறைகள் ஒவ்வொரு அமெரிக்க மாகாணத்துக்கும் மாறுபடுகிறது. சில மாகாண ஆளுநர்கள் கடுமையான சட்ட திட்டங்களை விதிக்கின்றனர்.
 
"நாம் இப்போது விதிகளைத் தளர்த்திவிட்டால், கொரோனா வைரஸ் இன்னும் மோசமாவதைப் பார்க்கலாம்" என்றார் பைடன்.
 
ஜோ பைடன், அமெரிக்க அதிபர்
 
மேலும் அமெரிக்காவின் தேசிய தடுப்பூசித் திட்டத்தின் வெற்றியைக் குறித்தும், அத்திட்டம் குறிப்பிட்ட இலக்கை வெகு விரைவாக எட்டி வருவதாகவும் கூறினார்.
 
வரும் ஏப்ரல் 19-ம் தேதிக்குள், 90 சதவீதம் வயது வந்த அமெரிக்கர்கள், கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ள தகுதியானவர்களாவார்கள். அவர்கள் தங்கள் வீட்டிலிருந்து ஐந்து மைல் தொலைவுக்குள் இருக்கும் தடுப்பூசி மையத்துக்குச் சென்று தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ளலாம் என உறுதியளித்துள்ளார் பைடன்.
 
அமெரிக்காவில் வாழும் அனைத்து வயது வந்தோரும் மே 01-ம் தேதிக்குள் கொரோன தடுப்பூசிக்காக தங்கள் பெயரைப் பதிவு செய்யலாம் எனக் கூறினார்.
 
அமெரிக்காவில் வாழும் வயது வந்தோர்களில், ஐந்தில் ஒருவருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அதே போல 65 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுவிட்டது என அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறுகிறது.
 
கொரோனா தடுப்பூசிக்கு யார் எல்லாம் தகுதியானவர்கள் என்பது ஒவ்வொரு மாகாணத்துக்கும் வேறுபடுகிறது. பெரும்பாலான மாகாணங்களில் சுகாதாரப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படுகின்றன. அவர்களைத் தொடர்ந்து 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்றன. ஜோர்ஜா மற்றும் அரிசோனா போன்ற சில மாகாணங்களில் 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படுவதாக நியூ யார்க் டைம்ஸில் செய்தி வெளியாகியுள்ளது.
 
ஒரு பக்கம் தீவிரமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டாலும், மறு பக்கம், சமூக இடைவெளியுடன் இருப்பது மற்றும் முக கவசம் அணிவது போன்ற நடவடிக்கையைக் கடைப்பிடிக்குமாறு அமெரிக்க மக்களை வலியுறுத்தியுள்ளார் அதிபர் ஜோ பைடன்.