வெள்ளி, 5 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (18:29 IST)

தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கை; இலங்கை கடல் எல்லையில் ரோந்து

தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கை; இலங்கை கடல் எல்லையில் ரோந்து
"கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவி இருக்கின்றனர். கோயில், மசூதி மற்றும் தேவாலயங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகரம் முழுவதும் 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்" என்று கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் தெரிவித்துள்ளார்.

அதே போல தமிழகத்தின் தலைநகர் சென்னையிலும், இலங்கையை ஒட்டியுள்ள கடல் எல்லையிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, செய்தியாளர்களிடம் பேசிய சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், தீவிரவாத அச்சுறுத்தல் வந்தது உண்மைதான் என்றும், நேற்று இரவில் இருந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

எந்த அசம்பாவிதங்களும் நடக்காமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.

கோவையில் வழக்கத்திற்கு மாறாக காவல் துறையினர் பல இடங்களில் வாகன சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கை; இலங்கை கடல் எல்லையில் ரோந்து

உக்கடம், டவுன்ஹால் பகுதிகள், பேருந்து நிலையம், ரயில் நிலையம் என ஆங்காங்கே காவல் துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதோடு, வாகனங்களை சோதனையிடுவது போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர், இலங்கையை சேர்ந்த 5 பேர் என மொத்தம் ஆறு நபர்கள் தமிழகத்தில் நுழைந்து இருப்பதாகவும் அவர்கள் லக்‌ஷர் இ தய்பா தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் எனவும் மத்திய உளவுத்துறையில் இருந்து தமிழக காவல்துறைக்கு தகவல் வந்துள்ளது.

அதன் அடிப்படையில் தமிழகத்தின் சில மாவட்டங்களில் குறிப்பாக கோவையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது என கூறப்படுகின்றது.

ஆனால், காவல்துறை தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக இந்த தகவல்கள் உறுதிப்படுத்தப்படவில்லை.
தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கை; இலங்கை கடல் எல்லையில் ரோந்து

கோவை மேற்கு மண்டலத்தின் காவல் துறை தலைவரிடம் இது குறித்து கேட்டபோது, இது ஒரு பொதுவான எச்சரிக்கை நடவடிக்கை, ஏதேனும் அசம்பாவிதம் நடந்துவிடக் கூடாது என்பதற்காக பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.
ஏடிஜிபி ஜெயந்த் முரளி கோவை வந்துள்ளார். தற்போது கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழக ஏடிஜிபி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகின்றது.

கடல் எல்லையில் பாதுகாப்பு
தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கை; இலங்கை கடல் எல்லையில் ரோந்து

தமிழகத்திற்குள் தீவிரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை அதிகாரிகள் விடுத்த எச்சரிக்கையடுத்து தீவிரவாத தாக்குதல் மற்றும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க இந்திய - இலங்கை கடல் எல்லைப் பகுதிகளான ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், தனுஸ்கோடி, மன்னார் வளைகுடா, பாக் நீரிணை, குருசடைத்தீவு உள்ளிட்ட பகுதியில் தமிழக கடலோர குழும காவல்துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் வழக்கத்தைவிட கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளது. பாம்பன் ரயில் பாலம், பாம்பன் சாலைப் பாலம், பேக்கரும்பில் உள்ள அப்துல்கலாம் நினைவுமண்டபம் ஆகியவற்றுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் குறிப்பாக வட மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வரும் அனைத்து ரயில்களிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.