வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (18:24 IST)

அமெரிக்கா, சீனாவை விட இந்திய பொருளாதார வளர்ச்சி அதிகம்: நிர்மலா சீதாராமன்

இந்திய பொருளாதார நிலை அதள பாதாளத்தில் சென்று கொண்டிருப்பதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் இன்று மாலை செய்தியாளர்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து பொருளாதார மந்த நிலை குறித்து விளக்கம் அளிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 'அமெரிக்கா, சீனாவை விட இந்திய பொருளாதார வளர்ச்சி அதிகம் என தெரிவித்தார். மேலும் இந்திய பொருளாதார சீர்திருத்தங்கள் தொடரும் என்றும், வரி சீர்திருத்தங்கள், தொழிலாளர் துறை சீர்திருத்தங்களும் தொடரும் என்றும் அமைச்சர்  நிர்மலா சீதாராமன் மேலும் தெரிவித்தார்.
 
 
பொதுத்துறை நிறுவனங்களின் செலவுகளை மத்திய அமைச்சரவை கண்காணிக்கும் என்று கூறிய அமைச்சர், அறிவிக்கப்பட்ட அனைத்து உள்கட்டமைப்பு திட்டங்களும் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தார். மேலும் பெரு நிறுவனங்கள் முதலீடுகளை திரட்டுவதற்கு ஆர்பிஐ விதிகள் தளர்த்தப்படும் என்றும் அதேபோல் முதலீடு செய்வதற்கு ஆதார் அடிப்படையிலான கேஒய்சியும் தளர்த்தப்படும் என்றும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
 
 
சிறு நிறுவனங்களின் ஜிஎஸ்டி நிலுவைகள் 30 நாட்களில் அளிக்கப்பட்டு வருவதால் திரும்ப வர வேண்டிய ஜிஎஸ்டி பற்றி சிறு நிறுவனங்கள் கவலையடைய வேண்டாம் என்று ஆறுதல் கூறிய அமைச்சர், நிதி நிறுவனங்களில் ​விரைவாக, எளிதாக கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வங்கிகள் இடையிலான நடவடிக்கைகள் மூலம் பணப்புழக்கம் மேம்படும் என்றும் கூறினார்