வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வியாழன், 5 செப்டம்பர் 2019 (16:54 IST)

பிக் பாஸ் மதுமிதா: "சக போட்டியாளர்கள் என்னை துன்புறுத்தினார்கள்; கமல் கண்டிக்கவில்லை"

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற தன்னை சக போட்டியாளர்கள் துன்புறுத்தியதாகவும் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் அதைக் கண்டிக்கவில்லையென்றும் நடிகை மதுமிதா புகார் அளித்துள்ளார்.


 
இது தொடர்பாக நசரத்பேட்டை காவல்நிலையத்தில் மதுமிதா அளித்துள்ள புகாரில், தான் 100 நாட்களும் அந்த நிகழ்ச்சியில் பங்குபெற விரும்பி அங்கே சென்றதாகவும் ஆனால், 56வது நாளில் தான் தன்னுடைய கருத்தைத் தெரிவித்ததற்காக, சக போட்டியாளர்கள் தன்னைத் துன்புறுத்தியதாகவும் தன்னுடைய புகாரில் தெரிவித்துள்ளார்.
 
மேலும், சக போட்டியாளர்களின் இந்த நடவடிக்கையை நிறுவனமோ, நிகழ்ச்சித் தொகுப்பாளரோ (கமல்ஹாசன்) கண்டிக்கவில்லையென்றும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டு, வலுக்கட்டாயமாக தான் அந்தப் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் மதுமிதா கூறியிருக்கிறார்.
 
நிகழ்ச்சியை நடத்தும் நிறுவனமும் தொலைக்காட்சியும் தனக்கு நிறையக் கட்டுப்பாடுகளை விதித்ததாகவும் இவர்கள் இனிமேலும் தன்னைப் பற்றி தவறான கருத்துக்களை பரப்பக்கூடாது, விமர்சனம் செய்யக்கூடாது என மதுமிதா புகார் அளித்திருக்கிறார். இந்த புகார் தபால் மூலம் அளிக்கப்பட்டுள்ளது.
 
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை மதுமிதா, அங்கு சக போட்டியாளர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து தன் கையை அறுத்துக்கொண்டார். இதையடுத்து அவர், பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
 
இதற்குப் பிறகு, பிக் பாஸில் பங்கேற்றதற்காக தனக்குக் கொடுக்க வேண்டிய தொகையைக் கொடுக்காவிட்டால் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக மதுமிதா குறுஞ்செய்தி அனுப்பியிருப்பதாக விஜய் டிவியின் சார்பில் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
 
இதற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்த மதுமிதா, "பிக் பாஸ் வீட்டைவிட்டு நான் வெளியேறியதிலிருந்து நான் மிகவும் மன அழுத்தத்தில் இருந்தேன். என் மீது தொலைக்காட்சி நிர்வாகம் பொய்யான புகாரை கொடுத்துள்ளது. இப்போது இதுகுறித்து விளக்கம் கேட்க அவர்களை தொடர்புகொள்ள முயற்சித்தும் விஜய் டிவி நிர்வாகத்தை தொடர்புகொள்ள முடியவில்லை" என்றார்.
 
பிக் பாஸ் வீட்டிலிருந்து நேயர்களின் வாக்குகளால் வெளியேற்றப்பட்ட சாக்ஷி, அபிராமி, மோகன் வைத்யா ஆகியோர் இரு நாட்களுக்கு முன்பாக மீண்டும் அந்த வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.