1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

பொ‌‌ய்க‌ள் ‌நிறை‌ந்த மோசடி அ‌றி‌க்கைதா‌ன் ஆளுந‌ர் உரை: வைகோ

ஆளுநர் உரை வைகோ ஈழத்தமிழர்கள்
இலங்கை தீவில் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு முழுக்க முழுக்க ராணுவ உதவிகளை வழங்கி வருகின்ற இந்திய அரசின் துரோகத்தை மூடி மறைக்கின்ற வகையில் ஆளுந‌ர் உரையில் கோயபெல்ஸ் பாணியில் பொய்களை அள்ளி வீசி உள்ளனர் என்று கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ள ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மொத்தத்தில் இந்த ஆளுந‌ர் உரை பொய்கள் நிறைந்த ஒரு மோசடி அறிக்கை ‌எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொடர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆளுந‌ர் உரையின் தொடக்கத்தில், இந்திய நாட்டின் ஜனநாயகத்துக்கு திருமங்கலம் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஜனநாயகத்தின் வலிமை உணர்த்தப்பட்டதாகவும், ஜனநாயகத்துக்கு பெருமை சேர்க்கப்பட்டதாகவும் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றிலேயே நடக்காத அராஜகத்தின் மூலம் 100 கோடி ரூபாயை வீதி வீதியாக, வீடு வீடாக அள்ளி வீசி பணம் வாங்க மறுத்த வீடுகளிலும் பணத்தை திணித்து, வாக்காளர்களை மிரட்டி பயமுறுத்தி, வாக்குப்பதிவு முடியும் வரை அமைச்சர்கள் அங்கேயே முகாமிட்டு, மாலை 4 மணி வரையிலும் 60 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், கடைசி ஒரு மணி நேரத்தில் 90 சதவீத வாக்குகள் பதிவானதாக ஆக்கப்பட்ட முறைகேட்டின் மூலம் ஆளும் கட்சி இத்தேர்தலில் பெற்ற வெற்றி ஜனநாயகத்துக்கே மிகப்பெரிய களங்கத்தையும் இழுக்கையும் தந்துள்ளது.

இலங்கை தீவில் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு முழுக்க முழுக்க ராணுவ உதவிகளை வழங்கி வருகின்ற இந்திய அரசின் துரோகத்தை மூடி மறைக்கின்ற வகையில் ஆளுந‌ர் உரையில் கோயபெல்ஸ் பாணியில் பொய்களை அள்ளி வீசி உள்ளனர்.

குறிப்பாக இலங்கையில் நடக்கும் போர், பிரச்சனையை தீர்க்க உதவாது என்பதை இந்திய அரசு வலியுறுத்தி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதைவிட பெரிய பொய்யை கோயபெல்ஸ் கூட சொல்ல முடியாது. இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று இதுவரையிலும் இந்திய அரசு இலங்கைக்கு சொல்லவே இல்லை. மொத்தத்தில் இந்த ஆளுந‌ர் உரை பொய்கள் நிறைந்த ஒரு மோசடி அறிக்கை ‌எ‌ன்று வைகோ தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.
About Writer
Webdunia