1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 26 பிப்ரவரி 2022 (13:01 IST)

யுக்ரேன் நெருக்கடி: தற்போது அங்கு என்ன நடக்கிறது?

யுக்ரேனில் ரஷ்ய படையெடுப்பு மூன்றாவது நாளாக தொடர்கிறது. யுக்ரேனில் இரவு முழுவதும் வான் தாக்குதலுக்கான சைரன்கள் ஒலித்ததால், தங்கள் வீடுகள் அல்லது நிலவறைகளில் பதுங்கியுள்ள பலருக்கும் நேற்றைய இரவு தூங்கா இரவாக அமைந்தது.

 
இரவில், தீவிரமான சண்டை மற்றும் வெடிகுண்டு தாக்குதல்கள் கீயவ் நகரில் பரவலாக நடைபெற்றதாக எங்களுக்கு செய்திகள் வந்தன. அங்கு இப்போது என்ன நடக்கிறது என்பதை இங்கு வழங்குகிறோம்:
 
ரஷ்ய தாக்குதல்களிலிருந்து தப்பிக்க யுக்ரேன் படைகள் முயற்சித்து வருகின்றன. கீயவில் உள்ள ராணுவப் பிரிவு ஒன்று, நகரின் முக்கிய பகுதி ஒன்றில், ரஷ்ய படையை விரட்டியதாக, யுக்ரேன் ராணுவம் முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.
 
கீயவில் காலையிலேயே தீவிரமான சண்டை நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. யுக்ரேன் ஆயுதப்படையின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில், கீயவின் வாசில்கீவ் பகுதியில் “தீவிரமான போர் நடைபெறுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, ரஷ்யா கீயவ் நகரை கைப்பற்ற முயல்வதாக தெரிவித்த நிலையில், அங்கு சண்டை நடைபெற்று வருகிறது.
 
கீயவ் இன்டிபென்டென்ட் (Kyiv Independent) ஊடகம் அளித்த தகவலின்படி, தலைநகர் கீயவில் 50-க்கும் மேற்பட்ட குண்டு வெடிப்புகள் மற்றும் துப்பாக்கிசூடு சம்பவங்கள் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
எனினும், தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் கூறுகையில், கீயவில் ராணுவம் நிலைமையை “கட்டுப்படுத்துவதாக” தெரிவித்தார். “இருக்கும் அனைத்து வழிகளிலும் படைகளை நிறுத்துகிறோம்,” என யுக்ரேன் செய்தி வலைதளமான Lb.ua-ல் அவர் தெரிவித்தார்.
 
அமெரிக்க நிர்வாகம் யுக்ரேனுக்கு உதவ 6.4 பில்லியன் டாலர் நிதியுதவியை அளிக்க நாடாளுமன்ற அவையை கேட்டுக்கொண்டுள்ளது.
 
50 லட்சத்துக்கும் அதிகமான யுக்ரேன் மக்கள் சுற்றியுள்ள நாடுகளுக்கு செல்வார்கள் என, ஐநா முகமைகள் கணித்துள்ளன.