டீப் சீக்கை அடுத்து சீனா அறிமுகம் செய்துள்ள புதிய ஏஐ செயலி.. மோனிகா செய்யும் மாயாஜாலம்..!
சீனாவில் இருந்து டீப்சீக் என்ற செயற்கை நுண்ணறிவு செயலி வெளியான நிலையில், அது அமெரிக்காவின் முன்னணி செயற்கை நுண்ணறிவு செயலிகளை பின்னுக்கு தள்ளிவிட்டது என்பதை பார்த்தோம். டீப்சீக் செயலி மிகப்பெரிய அளவில் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது சீனாவில் இருந்து மோனிகா என்ற புதிய செயற்கை நுண்ணறிவு செயலி வெளியாகியுள்ளது.
வழக்கமான மற்ற ஏஐ சாட்போட்கள் நாம் கேட்கும் கேள்விக்கு மட்டும் பதிலளிக்கும். அதே நேரத்தில், மோனிகாவிடம் ஒரு பணியை கொடுத்தால், அதுவே முழுவதுமாக ஆய்வு செய்து பல கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் முடித்துக் கொடுத்துவிடும் ஆற்றல் கொண்டதாக கூறப்படுகிறது.
உதாரணமாக, "காலநிலை மாற்றம் குறித்த அறிக்கை தேவை" என்று கேட்டால், அது ஆய்வு செய்து, அட்டவணைகளை தயாரித்து, அனைத்தையும் ஒருங்கிணைத்து இறுதி ஆவணமாக வழங்கிவிடும். அது சம்பந்தப்பட்ட பிற கேள்விகளை நாம் கேட்க வேண்டிய அவசியமே இருக்காது.
ஒரு விஷயத்தை நாம் கேள்வியாக கேட்டால், உடனடியாக பிரவுசிங் செய்து, ஸ்கிரீன்ஷாட் எடுத்து, ஆன்லைன் பணிகளை பதிவு செய்து, அறிக்கையாக தயாரித்து, பவர் பாயிண்ட் விளக்கமாகவும் மோனிகா வழங்குகிறது. இது ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு புதிய புரட்சி என்று கருதப்படுகிறது.
"சிங்கம்" திரைப்படத்தில், "அரிசி மூட்டை வந்திருக்கிறதா?" என விவேக் கேட்பதற்கும், சூர்யா கேட்பதற்கும் உள்ள வித்தியாசம் தான், மற்ற ஏஐ செயலிகளுக்கும் மோனிகா செயலிக்கும் உள்ள வித்தியாசம் என்று கூறப்படுகிறது.
Edited by Mahendran