1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 25 ஜனவரி 2020 (10:51 IST)

17 வருடங்களாக தபாலே கொடுக்காத தபால்காரர்: 24 ஆயிரம் கடிதங்கள் பறிமுதல்!

முகவரியை தேடி கடிதம் கொடுக்க சிரமப்பட்டுக்கொண்டு கடிதங்களை பதுக்கி வைத்த தபால்காரரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே உள்ள கனகவா பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற தபால்காரரை போலீஸார் கைது செய்துள்ளனர். 2003 முதல் அந்த பகுதியில் தபால்க்காரராக பணிபுரிந்த அவர் பல முகவரிகளை கண்டுபிடிக்க முடியாததால் கடிதங்களை தன் வீட்டில் மறைத்து வைத்துள்ளார். தினமும் தன்னால் கண்டுபிடிக்க முடிந்த முகவரிகளுக்கு மட்டும் கடிதத்தை சேர்ப்பித்துவிட்டு மற்ற கடிதங்களை வீட்டிலேயே பதுக்கி வைத்துள்ளார்.

கடந்த 17 ஆண்டுகளில் இவ்வாறும் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடிதங்களை தன் வீட்டில் பதுக்கி வைத்துள்ளார். இதுகுறித்து அவரை கைது செய்த போலீஸார் விசாரிக்கையில் தனது திறனை சக ஊழியர்கள் கேவலமாக கருதிவிட கூடாது என்பதற்காக அப்படி செய்ததாக கூறியுள்ளார்.

அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 24 ஆயிரம் கடிதங்களையும் மன்னிப்பு நோட்டீஸ் இணைத்து உரிய முகவரிகளுக்கு திரும்ப அனுப்பியுள்ளது ஜப்பான் தபால் துறை.