1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 9 ஏப்ரல் 2022 (12:46 IST)

அடுத்த வாரத்திற்கு தள்ளி போகும் நம்பிக்கை வாக்கெடுப்பு?

பாக். நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு அடுத்த வாரத்திற்கு தள்ளி போகலாம் என பாக். சட்டத்துறை அமைச்சர் தகவல். 

 
பாகிஸ்தானில் இம்ரான்கான் பிரதமராக ஆட்சி செய்து வரும் நிலையில் சமீப காலமாக பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடிகளால் இம்ரான்கான் ஆட்சி ஸ்திரத்தன்மை இழந்துள்ளது. இந்நிலையில் எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் இம்ரான்கான் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த நிலையில் அதை சபாநாயகர் நிராகரித்தார். அதை தொடர்ந்து பிரதமர் இம்ரான்கான் ஆட்சியை கலைத்துவிட்டு மறுதேர்தல் நடத்துவதாக அறிவித்தார்.
 
ஆனால் எதிர்கட்சிகள் இதை எதிர்த்து பாகிஸ்தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இம்ரான்கான் ஆட்சியை கலைத்தது செல்லாது என அறிவித்துள்ளது. இதனால் மீண்டும் நாடாளுமன்றம் கூட்டப்பட்டு நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்பதாக இம்ரான்கான் அறிவித்துள்ளார்.
 
அதன்படி பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இன்று இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறுகிறது. எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்த நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இன்று வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இந்த வாக்கெடுப்பு முடிந்தவுடன் புதிய பிரதமர் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
 
ஆனால், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்துவதற்காக பாகிஸ்தான் நாடாளுமன்றம் கூடிய போது  ஆளும்கட்சி உறுப்பினர்கள் ஒருவர் கூட வராததால் நம்பிக்கை வாக்கெடுப்பு அடுத்த வாரத்திற்கு தள்ளி போகலாம் என பாக். சட்டத்துறை அமைச்சர் ஃபவத் சவுத்ரி கூறியுள்ளார்.