1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 14 ஜூலை 2019 (10:06 IST)

நேபாளத்தில் வெள்ளம்: பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

நேபாளத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

நேபாளத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் சாலைகள், தெருக்கள் ஆகியவை வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மேலும் வீடுகளுக்கும் நீர் புகுந்ததில், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியதால், தங்குவதற்கு இருப்பிடம் இல்லாமல் அவதியில் உள்ளனர். மேலும் கனமழையால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 43 பேர் பலியாகி உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. நேபாளத்தின் லலித்பூர், கவ்ரே, கோடாங், போஜ்பூர், மகன்பூர் ஆகிய மாவட்டங்களில் மட்டுமே கிட்டத்தட்ட 24 க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் காணாமல் போயுள்ளனர். மேலும் 20 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளில், வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், பேரிடர் மீட்பு படையினர், வெள்ளத்தில் சிக்கிய 50 பேரை மீட்டுள்ளனர். இது குறித்து நேபாள உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர், வெள்ளப்பெருக்கு காரணமாக 6000 க்கும் மேற்பட்டோர் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் எனவும், அவர்களை மீட்க தீவிரமான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.