1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : புதன், 31 ஜனவரி 2024 (17:18 IST)

தமிழக மீனவர்கள் 18 பேர் விடுதலை.! நிபந்தனைகளுடன் விடுதலை செய்தது இலங்கை நீதிமன்றம்..!!

fisherman
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 18 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
 
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்குவாடி துறைமுக கடல் பகுதியில் இருந்து கடந்த 17-ம் தேதி மன்னார் வளைகுடாவுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். நடுக்கடலில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்ததாக கூறி பாம்பன் மீனவர்கள் 18 பேரை கைது செய்ததுடன் இரண்டு விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்
 
கைது செய்யப்பட்ட 18 மீனவர்கள் இலங்கையின் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது 18 மீனவர்களையும் 31-ந் தேதி (இன்று) வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். 
 
இதையடுத்து மீனவர்கள் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.  மீனவர்களின் சிறை காவல் இன்றுடன் முடிவடைந்தது.  இந்த நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 18 மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 
மீனவர்கள் மீது மன்னார் மீன்வளத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2 விசைப்படகுகள் மீதான வழக்கு விசாரணை மார்ச் 20-ம் தேதி நடைபெறும் என்று மன்னார் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் ஓரிரு நாட்களில் தமிழகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.