வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By

காராமணி புளி குழம்பு செய்ய...!

தேவையானப் பொருள்கள்:
 
காராமணி - 3 கைப்பிடி
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
சின்ன வெங்காயம் - 10
முழு பூண்டு - 1
தக்காளி - 2
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - 2  டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு ஏற்ப
 
வறுத்துப் பொடி செய்ய:
 
தனியா - ஒரு டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 1/2 டீஸ்பூன்
மிளகு - 2
சீரகம் - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
தாளிக்க:
 
நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்
வடகம் - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 1
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
சீரகம் - சிறிதளவு
கடலைப் பருப்பு - தேவையான அளவு
வெந்தயம் - தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு
 
செய்முறை:
 
முதல் நாள் இரவே காராமணியை ஊற வைத்து முதலில் பயறு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி, சிறிது உப்பு போட்டு வேக வைக்கவும். சீக்கிரமே வெந்துவிடும். வெந்ததும் நீரை வடித்துவிடவும். புளி கரைத்து வைத்துக்கொள்ளவும்.
 
வறுத்துப் பொடிக்க வேண்டியதை வெறும் வாணலியில் வறுத்து ஆறியதும் பொடித்து வைக்கவும். வெங்காயம், தக்காளி நறுக்கி  வைக்கவும். பூண்டு உரித்து வைக்கவும். 
 
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் தாளிக்க உள்ள பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத்  தாளித்துவிட்டு, முதலில் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். அடுத்து தக்காளி வதக்கி, அதன் பிறகு வெந்த பயறு சேர்த்து  வதக்கி, அதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு புளித்தண்ணீர் ஊற்றி மூடி கொதிக்க விடவும்.  நன்றாகக் கொதித்து, வாசனை வந்ததும் பொடித்து வைத்துள்ளப் பொடியைப் போட்டுக் கலக்கி விட்டு ஒரு கொதி வந்ததும்  இறக்கவும்.