1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
  4. How to make nutritious Kezhvaragu Puttu...!!

சத்தான கேழ்வரகு புட்டு செய்வது எப்படி....?

கேழ்வரகு புட்டு
தேவையானப் பொருள்கள்:
 
கேழ்வரகு மாவு - ஒரு கப்
வேர்க்கடலை - 1/2 கப்
எள் - ஒரு டீஸ்பூன்
வெல்லம் - அரை கப்
உப்பு - தேவைக்கு ஏற்ப

செய்முறை:
 
முதலில் வேர்க்கடலை, எள் இரண்டையும் தனித்தனியாக வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளவும். வேர்க்கடலை ஆறிய பிறகு தோலெடுத்துவிட்டு அதனுடன்  எள்ளையும் சேர்த்து மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி, அடுத்து வெல்லம் சேர்த்து மேலும் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். மைய அரைக்க வேண்டாம். சிறிது  கொரகொரப்பாக இருக்க வேண்டும்.
 
அடுத்து கேழ்வரகு மாவில் துளி  உப்பு போட்டுக் கலந்து (உப்பு சேர்ப்பது சுவைக்காகத்தான்),தண்ணீரைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு இரண்டு கைகளாலும்  மாவைப் பிசறினார்போல் கிளறவும்.
 
தண்ணீரைக் கலக்கும்போது கொஞ்சம் கவனமாகச் சேர்க்க வேண்டும். அதிகமாகிவிட்டால் மாவு புட்டுபோல் இல்லாமல் கொழகொழப்பாகிவிடும். தண்ணீர் குறைவாக இருந்தால் புட்டு வேகாமல் வெண்மையாக இருக்கும். ஒரு கப் மாவிற்கு 1/2 கப்பிற்கும் குறைவானத் தண்ணீர் தேவைப்படும்.
 
தண்ணீர் சேர்த்துப் பிசறிய பிறகு ஒரு 10 நிமிடம் மூடி வைக்கவும். பிறகு எடுத்து கட்டிகளில்லாமல் உதிர்த்து விடவும். அதன்பிறகு இட்லி அவிப்பதுபோல் இட்லி கொத்தில் ஈரத்துணி போட்டு மாவை அவிக்கவும்.
 
ஆவி வந்து வாசனை வந்ததும் எடுத்து ஒரு தட்டில் கொட்டி வேர்க்கடலைக் கலவையைக் கலந்து விடவும். விருப்பமானால் துளி ஏலக்காய்த் தூள் சேர்க்கலாம். இப்போது சத்தான, சுவையான கேழ்வரகு புட்டு தயார். சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
கடலை மாவை வைத்து இயற்கையான முறையில் அழகை பெற...!!