வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. அசைவம்
Written By Sasikala

சுவை மிகுந்த மட்டன் குழம்பு செய்வது எப்படி...?

தேவையான பொருட்கள்: 
 
மட்டன் - 3/4 கிலோ 
சின்ன வெங்காயம் - 1/2 கிலோ (நறுக்கியது) 
தக்காளி - 1 (நறுக்கியது) 
தனியாத் தூள் - 2 டேபிள் ஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 
பட்டை - 2 
மிளகு - 1 டீஸ்பூன் 
சீரகம் - 1 டீஸ்பூன் 
சோம்பு - 1 டீஸ்பூன் 
கசகசா - 1 டீஸ்பூன் 
தேங்காய் - 1 மூடி (துருவியது) 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன் 
வரமிளகாய் - 10 
கிராம்பு - 2 
ஏலக்காய் - 2 
பிரியாணி இலை - 1 
கறிவேப்பிலை - சிறிது 
எண்ணெய் - தேவையான அளவு 
உப்பு - தேவையான அளவு

செய்முறை: 
 
முதலில் மட்டனை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கழுவி வைத்துள்ள மட்டன், மஞ்சள் தூள், 1  டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து, 1 கப் தண்ணீர் ஊற்றி, 5 விசில் விட்டு இறக்க வேண்டும். 
 
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி வரமிளகாய், சிறிது கறிவேப்பிலை, சீரகம் மற்றும் மிளகு சேர்த்து வறுத்து, தனியாக  ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். அதே வாணலியில் உள்ள எஞ்சிய எண்ணெய்யில் பாதி வெங்காயத்தை போட்டு வதக்கி இறக்க வேண்டும். அடுத்து,  மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் சோம்பு, கசகசா, தேங்காய் சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின் வதக்கிய அனைத்தையும்  தனித்தனியாக மிக்ஸியில் போட்டு, நைஸாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். 
 
பிறகு அதே கடாயை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, பிரியாணி இலை மற்றும் ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர்  தனியாக எடுத்து வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கி, மீதமுள்ள இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு 3-5 நிமிடம் வதக்கிவிட வேண்டும். வெங்காயம்  நன்கு வதங்கியதும், அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின் வேகவைத்துள்ள மட்டனை ஊற்றி, ஒரு கொதி விட வேண்டும். 
 
பின் அத்துடன் தேங்காய் கலவையை தவிர, அரைத்து வைத்துள்ள அனைத்தையும் சேர்த்து, உப்பு போட்டு நன்கு 10 நிமிடம் கொதிக்க விடவும். இறுதியில் நைஸாக அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 5-10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால்,  அருமையான மட்டன் குழம்பு தயார்.