1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: வெள்ளி, 8 ஜூன் 2018 (13:07 IST)

ஸ்டெர்லைட் மூடப்பட்டதால் தமிழக அரசுக்கு சிரமம்: அமைச்சர் தங்கமணி

தூத்துகுடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அந்த பகுதி மக்கள் கடந்த பல வருடங்களாக போராடி வந்தனர். சமீபத்தில் ஆலையை நிரந்தரமாக மூடியே தீர வேண்டும் என்று நடந்த போராட்டத்தில் 13 பேர் பலியாகினர். இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து அந்த ஆலைக்கு தூத்துகுடி கலெக்டர் சீல் வைத்தார். இதனால் ஆலை தற்போது மூடப்பட்டுள்ளதால் காப்பர் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் இன்று சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் தங்கமணி, 'ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் மின்மாற்றிகளுக்கு தேவையான காப்பர் கிடைப்பதில் சிரமம் இருப்பதாகவும், தாமிரத்தை வெளியில் இருந்து வாங்கி அமைக்க வேண்டியுள்ளதால் மின்மாற்றிகள் அமைப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் மாற்று இடத்தில் காப்பர் வாங்கப்படுவதாகவும் கூறினார். சிரமம் இருந்தாலும் ஸ்டெர்லைட் ஆலை இனி திறக்க வழியில்லை என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 
இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மூட தற்போது அரசு வெளியிட்டுள்ள அரசாணை என்பது கண்துடைப்பே என்றும், ஆலை நிர்வாகம் நீதிமன்றத்திற்கு சென்றால் அரசாணை ரத்து செய்யப்பட்டு விடும் என்றும் எனவே அமைச்சரவையைக் கூட்டி சட்டமன்றத்தில் ஆலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் கருணாஸ் எம்.எல்.ஏ கூறியுள்ளார்.