1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: திங்கள், 12 ஜூலை 2021 (16:30 IST)

ஜீவஜோதி பயோபிக்குக்கு எதிர்ப்பு கிளப்பும் சரவண பவன் அண்ணாச்சி வாரிசுகள்!

ஜீவஜோதியின் பயோபிக் திரைப்படத்தை எடுக்க சரவண பவன் ஓட்டலின் தற்போதைய உரிமையாளர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்ப உள்ளார்களாம்.

தமிழகம் முழுவதும் பிரபலமான வழக்கான சரவணபவன் ராஜகோபால் – ஜீவஜோதி – பிரின்ஸ் சாந்தகுமார் வழக்கு கடந்த ஆண்டு இறுதியில் தீர்ப்பளிக்கப்பட்டது. ஜீவஜோதியின் கணவரைக் கொன்றதற்காக சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் சிறை சென்ற சில வாரங்களிலேயே உடல்நலக் கோளாறு காரணமாக அவர் உயிரிழந்தார். வழக்கு நடந்த காலங்களில் தஞ்சாவூரில் தங்கி தையல் பயிற்சி நிறுவனம் ஒன்றை நடத்திவந்த ஜீவஜோதி சில மாதங்களுக்கு முன்னர் அவரது உறவினர் கருப்பு முருகானந்தத்தின் சிபாரிசால் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

இந்நிலையில் இப்போது பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஒன்று ஜீவஜோதியின் சட்டப்போராட்டத்தை திரைப்படமாக எடுக்க முடிவு செய்து அதற்கான திரைக்கதை அமைக்கும் பணிகளை இப்போது செய்துவருகிறது. விரைவில் இயக்குனர் மற்றும் நடிகர் நடிகைகள் பற்றி விவரம் அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

ஆனால் இந்த படம் வெளியானால் தங்களின் பிராண்ட் பாதிக்கப்படும் என சரவண பவன் ராஜகோபாலின் வாரிசுகளும் தற்போது அந்த நிறுவனத்தை நடத்தி வருபவர்களும் அச்சத்தில் உள்ளனராம். மேலும் அந்த கதை தங்களின் தந்தையை தவறாக காட்டும் விதமாக படமாகும் என்பதால் அதை எடுக்க விடாமல் தடை செய்ய சட்ட ரீதியான முன்னெடுப்புகளை எடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.