வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 6 செப்டம்பர் 2019 (21:30 IST)

4 பந்துகளில் 4 விக்கெட்டுக்கள்: மலிங்கா சாதனை

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது 3வது டி20 போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்  செய்ய முடிவு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 125 ரன்கள் அடித்தது. குணதிலகா 30 ரன்களும், டிக்வெல்லா 24 ரன்களும், மதுஷங்கா 20 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து அணியின் சாண்ட்னர் மற்றும் ஆஸ்ட்லே தலா மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
 
இந்த நிலையில் 126 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி பேட்டிங் செய்ய தொடங்கியது. முதல் ஓவரில் 3 ரன்களும், இரண்டாவது ஓவரில் 12 ரன்களும் நியூசிலாந்து எடுத்த நிலையில் மூன்றாவது ஓவரை மலிங்கா வீச வந்தார். முதல் இரண்டு பந்துகளை டாட்பாலாக வீசிய மலிங்கா 3வது பந்தில் முன்ரோவை வீழ்த்தினார். அதன்பின்னர் 4வது பந்தில் ரூதர்போர்டையும் வீழ்த்தியதால் ஹாட்ரிக் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தது போலவே 5வது பந்தில் கிராந்தோம் அவுட் ஆனார். ஹாட்ரிக் எடுத்த மகிழ்ச்சியில் துள்ளி குதித்த மலிங்கா 6வது பந்திலும் டெய்லரை வீழ்த்தி நியூசிலாந்து அணியை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். கடந்த 2007ஆம் ஆண்டு உலகக்கோப்பையிலும் மலிங்கா 4 பந்துகளில் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனையடுத்து மீண்டும் 5வது ஓவரை வீசிய மலிங்கா அதிலும் ஒரு விக்கெட்டை வீழ்த்தியதால் இதுவரை விழுந்த ஐந்து விக்கெட்டுக்களையும் மலிங்கா கைப்பற்றியுள்ளார். நியூசிலாந்து அணி சற்றுமுன் வரை 7 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 38 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 13 ஓவரில் 88 ரன்களை நியூசிலாந்து எடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்