வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 24 மார்ச் 2021 (08:38 IST)

116 ரன்களுக்கு 10 விக்கெட்… சறுக்கிய இங்கிலாந்து… கலக்கிய இந்திய பவுலர்கள்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி சிறப்பான தொடக்கம் அமைந்தும் தோல்வியை தழுவியுள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று புனேவில் நடைபெற்றது. அதில் முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 317 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியின் தவான்(98), கோலி (56), ராகுல் (62), குருணாள் பாண்ட்யா(58) ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதையடுத்து 318 ரன்கள் என்ற இலக்கோடு களமிறங்கிய இங்கிலாந்து அணி ஒரு நாள் போட்டி என்பதை மறந்த டி 20 போட்டி போல அதிரடியில் இறங்கியது. அந்த அணியின் ஜேசன் ராய் மற்றும் பார்ஸ்ட்டோ இருவரும் வான வேடிக்கைக் காட்ட ரன்ரேட் 9 ஐ நெருங்கியது. இதனால் இங்கிலாந்து அணி எளிதாக வெற்றி பெற்றுவிடும் என்ற நிலையே இருந்தது.

ஆனால் 135 ரன்களில் முதல் விக்கெட் இழந்த பின்னர் அந்த அணியின் பேட்ஸ்மேன்களை இந்திய பவுலர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். அடுத்த 115 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து இங்கிலாந்து 66 ரன்களில் தோல்வியைத் தழுவியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பார்ஸ்டோ 94 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். இந்திய அணி சார்பில் அறிமுக வீரர் பிரதீஷ் கிருஷ்ணா 4 விக்கெட்களையும், ஷர்துல் தாக்கூர் 3, புவனேஷ்வர் குமார் 2 மற்றும் குல்தீப் யாதவ் 1 விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினர்.