வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 24 டிசம்பர் 2018 (14:01 IST)

ஆஸ்திரேலியா அணியில் 7 வயது சிறுவன் – சமாளிக்குமா இந்தியா ?

ஆஸ்திரேலியாவுடன் நாளை மறுநாள் நடைபெற இருக்கும் பாக்ஸிங் டே டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 7 வயது சிறுவனான ஆர்ச்சி சில்லரின் பெயரும் இணைக்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஒரு நிகழ்வில் இந்திய ஆஸ்திரேலிய வீரர்கள் கலந்துகொண்டனர். அப்போது ஆஸ்திரேலிய அணியில் 7 வயது சிறுவனான ஆர்ச்சி சில்லர் இணைக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் பாக்ஸிங் டே மேட்சில் ஆஸ்திரேலியாவுக்கு இணைக்கேப்டனாக செயல்படுவார் என்றும் ஆஸ்திரேலியக் கேப்டன் டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.

7 வயது ஆகும் ஆர்ச்சி சில்லர் மூன்று மாதக் குழந்தையாக இருந்தபோது வினோதமான இருதயக் கோளாறால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளார். சிகிச்சைக்குப் பின்னும் அவரது இதயத் துடிப்பு சீரற்று இருந்து வருகிறது. இந்நிலையில் அவரது ஆசை என்ன என்று அவரது தந்தைக் கேட்டபோது ஆஸ்திரேலியக் கிரிக்கெட் அணிக்குக் கேப்டனாவது எனத் தெரிவித்துள்ளார். இதை ஆஸ்திரேலிய அணி நிர்வாகத்திற்குத் தெரியப்படுத்தியுள்ளார் அவரது தந்தை.

ஆர்ச்சி சில்லரைப் பற்றி அறிந்த ஆஸ்திரேலிய அணியின் பயிறசியாளர் ஜஸ்டின் லாங்கர் ஆர்ச்சிக்கு இந்த வாய்ப்பை வழங்கியுள்ளார். ஆஸ்திரேலிய அணியில் 15 வது வீரராக ஆர்ச்சி சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் அணியில் விளையாடுவாரா அல்லது பெவிலியனில் இருந்து அணிக்கு உதவுவாரா என்ற விவரம் தெரியவில்லை. அப்படி விளையாடினால் கோஹ்லியின் விக்கெட்டைத் தன்னால் வீழ்த்த முடியும் என சிறுவன் ஆர்ச்சி தன்னிம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.