வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. 2016-கண்ணோட்டம்
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 20 டிசம்பர் 2016 (16:44 IST)

2016 தமிழ் சினிமாவில் உதிர்ந்த நட்சத்திரங்கள்!

1. தொலைக்காட்சி நடிகர் சாய் பிரசாந்த் தற்கொலை
 
பிரபல தொலைக்காட்சி நடிகர் சாய் பிரசாந்த் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  முன்னணி தொலைக்காட்சிகளில் பிரபல சீரியல்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் சாய் பிரசாந்த். இவர், நடனம், மிமிக்ரி என  பன்முக திறமை கொண்டவர்.


 

 
இவரது திறமையைக் கண்டு வியந்த தமிழ் திரையுலகம் இருகரம் கூப்பி வரவேற்றது. இதன் விளைவாக வடகறி படத்தில்  வில்லனாக நடித்து அசத்தினார். இதனையடுத்து, திருமண வாழ்க்கையில் அடியெடுத்துவைத்தார். இந்த நிலையில், மார்ச் 13 ஆம் தேதி இவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த செய்தி தமிழ் தொலைக்காட்சியில் பெரும் அதிர்ச்சியில்  ஆழ்த்தியுள்ளது.
 
2. நடிகர் கலாபவன் மணி மரணம்
 
தமிழ், மலையாள படங்களில் நடித்துள்ள கலாபவன் மணி கடந்த மார்ச் மாதம்  6–ந்தேதி மரணம் அடைந்தார். பண்ணை  வீட்டில் நண்பர்களுடன் மதுகுடித்தபோது மயங்கி விழுந்த அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி  இறந்தார். கலாபவன் மணி உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் அருந்திய மதுவில் அளவுக்கு அதிகமாக மெத்தனால்  ஆல்கஹால் இருந்ததாக தெரிவித்தனர்.


 
 
லைசென்ஸ் பெற்று விற்கப்படும் மதுவில் இவ்வளவு அதிக அளவில் மெத்தனால் ஆல்கஹால் இருக்க வாய்ப்பு இல்லை  என்றும் கூறினார்கள். இது திரைப்பட துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் கலாபவன் மரணத்தில் மர்மம்  இருப்பதாக, அவரது குடும்பத்தினர் புகார் தெரிவித்ததன் அடிப்படையில் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் அவரது உடலில் மெத்தனால் என்ற விஷத்தன்மை வாய்ந்த ரசாயணம் கலந்திருப்பது தெரியவந்தது.
 
3. ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் மரணம்


 
 
தமிழ் திரையுலகின் முதல் மக்கள் தொடர்பாளர் (பி.ஆர்.ஓ.) ஃபிலிம் நியூஸ் ஆனந்தன். தமிழ் சினிமா சரித்திரத்தை  ஆவணப்படுத்தியவர்களில் முதன்மையானவரும், முக்கியமானவரும் ஃபிலிம் நியூஸ் ஆனந்தன். அவரது மறைவு  திரைத்துறைக்கு மாபெரும் இழப்பாகும். ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, திராவிட  கழக தலைவர் வீரமணி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
 
4. பழம்பெரும் நடிகை ஜோதிலட்சுமி காலமானார்
 
தனது கவர்ச்சி நடனத்தால் அரை நூற்றாண்டு ரசிகர்களை மகிழ்வித்த நடிகை ஜோதிலட்சுமி ஆகஸ்டு 9 தேதி காலமானார்.  ஜோதிலட்சுமி 1963 -இல் வெளிவந்த பெரிய இடத்து பெண் படத்தின் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தார். அழகும் திறமையும் இருந்த அவருக்கு அதிகமும் கிடைத்தது அந்த கால கிளப் டான்ஸ் எனப்படும் கவர்ச்சி நடனங்கள் மட்டுமே. ஜோதிலட்சுமியின் கவர்ச்சி நடனத்துக்காகவே அன்று பலரும் திரையரங்குக்கு வந்தனர்.
 

 


 
 
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று நான்கு மொழிகளில் ஜோதிலட்சுமி கொடிகட்டிப் பறந்தார். அவரது சகோதரி ஜெயமாலினியின் வருகை ஜோதிலட்சுமியின் புகழை மங்கச் செய்தது. ஆனாலும், வயதான நிலையிலும் அவர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். சினிமாவில் அவர் சம்பாதித்த இமேஜுக்கு முற்றிலும் வேறு திசையில் இருந்தது அவரது தொலைக்காட்சி நடிப்பு. ரத்த புற்று நோய்க்கு சிகிச்சை எடுத்து வந்த அவர் காலமானார்.
 
5. திருலோகசந்தர் மறைவு
 
ஆஸ்கர் விருது தேர்வுக்குச் சென்ற முதல் தமிழ்த் திரைப்படமான "தெய்வ மகன்" படத்தை இவர் இயக்கியவர் என்று திமுக  தலைவர் கலைஞர், இயக்குநர் திருலோகசந்தர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து கருணாநிதி  வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ’’பழம்பெரும் இயக்குனரும், பல வெற்றிப் படங்களை இயக்கியவரும்,   தனிப்பட்ட  முறையில் என்னிடம் பற்றும் பாசமும் கொண்டவருமான அருமை நண்பர் ஏ.சி. திருலோகசந்தர் மறைந்த செய்தியினை அறிந்து  மிகவும் வருந்துகிறேன்.

 
சுமார் 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியவர் என்பதும், அவர் நடிகர் திலகம் நடித்த 25க்கும் மேற்பட்ட  திரைப்படங்களை, குறிப்பாக "ஆஸ்கர்" விருது தேர்வுக்குச் சென்ற முதல் தமிழ்த் திரைப்படமான "தெய்வ மகன்" படத்தை இவர்  இயக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
6. இயக்குனர் கே. சுபாஷ் மரணம்

 
இயக்குனர்கள் கிருஷ்ணன் பஞ்சு ஆகியோரில் கிருஷ்ணனின் மகன் பிரபல இயக்குநர் கே சுபாஷ் தன்னுடைய 57 வயதில்  மரணமடைந்தார். இவர் உத்தம புருஷன், சத்திரியன், பிரம்மா, நினைவிருக்கும் வரை, ஏழையின் சிரிப்பில், சபாஷ் போன்ற பல  வெற்றி படங்களை இயக்கியவர். இந்தியிலும் கதாசிரியராக பிரபலமானவர். சென்னை எக்ஸ்பிரஸ், தில்வாலே உட்பட  ஷாரூக்கான் படங்களில் பலவற்றுக்கு இவர் தான் கதாசிரியர்.
 
7. பிரபல திரைப்படப் பாடல் ஆசிரியர் நா.முத்துக்குமார் மறைவு
 
தமிழ் நாட்டின் பிரபல திரைப்படப் பாடல் ஆசிரியாரான நா.முத்துகுமார் ஆகஸ்டு 14 ஆம் தேதி உயிரிழந்தார். அவருடைய  இறப்பை தொடர்ந்து  திரைத்துறை பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 
கவிஞர் வைரமுத்து இரங்கல்,
 
இலக்கியம் அறிந்த ஒரு பாடலாசிரியனைக் காலம் காவுகொண்டுவிட்டது. நா.முத்துக்குமாரின் மறைவுச் செய்தி சற்றும்  எதிர்பாராதது. அவர் குடும்பத்தைப் போலவே என்னாலும் தாங்க இயலாதது. இது சாகும் வயதல்லை; சாதிக்கும் வயது. தன்  பாடல்களுக்கு இரண்டு முறை தேசிய விருதுகள் பெற்றவர். அவர் பெறவேண்டிய மூன்றாவது விருதைக் காலம்  களவாடிவிட்டது.
 
8. நடிகை சபர்ணா தற்கொலை
 
சென்னையை அடுத்த மதுரவாயல் சேமாத்தம்மன் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், தனியாக வசித்து வந்த நடிகை  சபர்ணா, கடந்த நவம்பர் 9 ஆம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இரு நாட்களாக அழுகிய நிலையில் கிடந்த சபர்ணாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு பொலிசார் அனுப்பினர். இதற்கிடையே சபர்ணா காதலித்ததாக கூறப்படும்  நபரிடம் பொலிசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.


 
 
அழுகிய நிலையில் சபர்ணா உடல் கைப்பற்றப்பட்டதால் பல்வேறு சந்தேகங்கள் ஏழுந்துள்ளது. மேலும், ஒருவர் தற்கொலை  செய்யும் போது நிர்வாண நிலையில் இருக்க வாய்ப்பு குறைவு. அதேநேரத்தில் சபர்ணா இடது கை மணிக்கட்டு  அறுக்கப்பட்டுள்ளது. வீட்டிலும் சந்தேகம்படும் படியான தடயங்களை பொலிசார் கைப்பற்றி உள்ளனர்.