1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2019 (10:54 IST)

வேலூர் பிரச்சாரத்திற்கு கனிமொழி வராதது ஏன்?

வேலூர் மக்களவை தேர்தல் பிரச்சாரம் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் அதிமுக மற்றும் திமுக தலைவர்கள் மிகத் தீவிரமாக பிரச்சாரம் செய்தனர். ஆனால் இந்த பிரச்சாரத்தின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கனிமொழி தேர்தல் பிரச்சாரம் செய்ய வரவில்லை
 
வேலூர் தொகுதியில் பிரச்சாரம் செய்ய ஜூலை 30, 31 ஆகிய தேதிகளில் கனிமொழி தேதி கொடுத்து இருந்தார். ஆனால் அந்த குறிப்பிட்ட தேதிகளில் அவர் பிரச்சாரத்துக்கும் வரவில்லை. திமுக தலைமையின் அறிவுறுத்தலின் பேரில்தான் அவர் பிரச்சாரத்துக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது
 
ஆனால் அதே நேரத்தில் உதயநிதி ஸ்டாலின் வேலூர் தொகுதி முழுவதும் தீவிரமாக சூறாவளி பிரச்சாரம் செய்தார். வேலூர் தொகுதியில் திமுக வெற்றி பெற்றால் உதயநிதியால் தான் வெற்றி பெற்றது என்ற பெயர் வர வேண்டும் என்றும், கனிமொழியால் வெற்றி பெற்றது என்ற பெயர் வரக் கூடாது என்பதற்காக தான் திமுக தலைமை கனிமொழியை தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிக்கவில்லை என்றும் ஒரு சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர் 
 
ஆனால் இந்த குற்றச்சாட்டை திமுகவின் முக்கிய தலைவர் பொன்முடி மறுத்துள்ளார். கனிமொழி உள்பட அனைத்து திமுக எம்பி களையும் டெல்லியிலிருந்து பணிகளை கவனிக்கச் சொல்லி முக ஸ்டாலின் அறிவுறுத்தியதாகவும் அதன் பெயரில் தான் கனிமொழி திட்டமிட்டிருந்த தேர்தல் பிரச்சாரத்துக்கு வரவில்லை என்றும், திமுக-வில் குழப்பம் விளைவிக்க ஒரு சிலர் செய்யும் முயற்சிதான் இந்த வதந்தி என்றும் திமுகவில் உள்ள அனைத்து தலைவர்களும் ஒற்றுமையாக இருப்பதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார். இருப்பினும் கனிமொழி தேர்தல் பிரச்சாரத்திற்கு வராதது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மையாகவே தெரிகிறது