செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 24 ஆகஸ்ட் 2017 (13:56 IST)

ஆட்சியை கவிழ்க்க மாட்டோம் - தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களின் குரல்

அரசுக்கு எதிராக வாக்களிக்க மாட்டோம் என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
அதிமுகவின் இரு அணிகளும் இணைந்ததை அடுத்து, அவர்களுக்கு எதிராக களம் இறங்கியுள்ளார் தினகரன். இதன் எதிரொலியாக, அவரை ஆதரிக்கும் 19 அதிமுக எம்.எல்.ஏக்கள், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கை இழந்துவிட்டதாகவும், அவருக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாகவும் சமீபத்தில் ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். மேலும், தற்போது அந்த எம்.எல்.ஏக்கள் பாண்டிச்சேரியில் உள்ள ஒரு கடற்கரை விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  
 
இந்த விவகாரம், ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், எடப்பாடி தரப்பிற்கு ஆதரவாக 113 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். ஆனால், எதிராக 120 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால், ஆட்சியை தக்க வைக்க முடியாத சூழ்நிலை ஏற்படும் எனக் கூறப்பட்டது. 
 
இந்நிலையில், தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது “எம்.எல்.ஏக்கள் விடுதியில் தங்கியிருப்பதில் என்ன தவறு எதுவும் இல்லை. மருத்துவர் அறிவுரைப்படி தினகரன் ஓய்வில் இருக்கிறார். அரசுக்கு எதிராக வாக்களிப்போம் என நாங்கள் ஒருபோதும் கூறவில்லை. ஆனால், முதல்வர் பழனிச்சாமியின் மீது நம்பிக்கை போய்விட்டது. சேகர் ரெட்டி, கரூர் அன்புநாதன் ஆகியோரின் டைரியில் உள்ள அமைச்சர்களிடம்தான் எங்களுக்கு பிரச்சனை ” என அவர் கூறினார்.
 
இதன் மூலம், ஆட்சியை கவிழ்ப்பது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களின் திட்டமில்லை என்பது தெரியவந்துள்ளது.