வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 31 ஜூலை 2020 (20:30 IST)

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கைக்கு விஜயகாந்த் வரவேற்பு

சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த புதிய கல்விக் கொள்கை குறித்து அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்கள் உட்பட பலர் கருத்து கூறி வருகின்றனர். புதிய கல்விக் கொள்கையை பெரும்பாலானோர் ஆதரித்தும், ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
குறிப்பாக இந்த கல்விக் கொள்கையில் உள்ள ஐந்தாம் வகுப்பு வரை தாய் மொழியில் கல்வி என்ற அம்சத்தை எதிர்க்கட்சிகள் கூட வரவேற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை வரவேற்கிறேன் என்றும் அதே நேரத்தில் தாய்மொழி வழிக் கல்வி திட்டத்தை எட்டாம் வகுப்பு வரை நீடிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.
 
இந்த அறிக்கையில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: மழலையர்‌ கல்வி முதல்‌ இடைநிலைக்‌ கல்விவரை, அனைத்து மட்டத்திலும்‌ உலகளாவிய அணுகுமுறையை உறுதி செய்வதை தேசிய கல்விக்‌ கொள்கை வலியுறுத்துகிறது.  பள்ளிப்படிப்பை பாதியிலேயே கைவிட்ட சுமார்‌ 2 கோடி குழந்தைகளை மீண்டும்‌ பள்ளியில்‌ சேர்க்க இதில்‌ வழிவகை செய்யப்பட்டுள்ளது.
 
தாய்மொழி கல்வி 5-ஆம்‌ வகுப்பு வரை கட்டாயம்‌ என்ற அறிவிப்புக்கு வரவேற்கிறேன்‌. இந்த வரையறையை 8-ஆம்‌ வகுப்பு வரை நீட்டிக்க வேண்டும்‌.ஒருங்கிணைந்த பி. எட்கல்வி, வெளிப்படையான ஆசிரியர்கள்‌ நியமனம்‌ போன்ற அறிவிப்புகளுக்கு ஆசிரியர்‌ சங்கங்கள்‌ வரவேற்பு தெரிவித்துள்ளன 
 
உடல்‌ குறைபாடு உள்ள குழந்தைகள்‌ உயர்கல்வி வரை முழுமையாக மேற்கொள்ள இது வழிவகுக்கும்‌. அன்னை மொழியை காப்போம்‌, அனைத்து மொழியினையும்‌ கற்போம்‌" என்ற தேமுதிகவின்‌ கொள்கையின்படி மத்திய அரசின்‌ புதிய கல்விக்‌ கொள்கையில்‌ தாய்‌ வழிக்கல்வி திட்டத்தினை 8-ஆம்‌ வகுப்பு வரை நீட்டிக்க வேண்டும்‌.
 
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது