வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 4 ஜூலை 2019 (14:20 IST)

வேலூர் எம்.பி உதயநிதியா?- ஸ்டாலினின் மெகா ப்ளான்

வேலூர் மக்களவை தேர்தல் ஆகஸ்டு 5-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று திமுக இளைஞரணி செயலாளராக பதவியேற்கும் உதயநிதி ஸ்டாலின் வேலூர் தேர்தலில் போட்டியிடுவார் என்று அரசல் புரசலாக பேச்சு அடிப்படுகிறது.

கடந்த மக்களவை தேர்தலின்போது வேலூரில் அதிமுக சார்பில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகமும், திமுக சார்பில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்தும் போட்டியிடுவதாக இருந்தது. அப்போது திடீரென துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் வீடுகளிலும், அவர்களுக்கு சொந்தமான பள்ளி, கல்லூரிகளிலும், சொந்தக்காரர்கள் வீட்டிலும் வருமானவரித் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அதில் கதிர் ஆனந்த உறவினர் வீடுகளில் இருந்து 10 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இவை வாக்காளர்களுக்கு சட்டத்திற்கு புறம்பாக கொடுப்பதற்காக வைத்திருந்த பணம் என்று கூறி தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் ரத்து செய்யப்பட்ட தேர்தல் வரும் ஆகஸ்டு 5ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய ஜூலை 18 கடைசி நாள் என கூறப்பட்டுள்ளது. தற்போது கதிர் ஆனந்த் மீது பணப்பறிமுதல் வழக்கு இருப்பதால் அவரை வேட்பாளராக நிறுத்தினால் திமுக பல எதிர்விமர்சனங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.

உதயநிதி ஸ்டாலின் கட்சியிலும், மக்களிடையேயும் தற்போது நல்ல செல்வாக்கு பெற்றுள்ளார். அதே சமயம் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மக்களவை சென்றிருப்பதால், தனது மகனும் எம்.பி ஆக நேரம் வந்துவிட்டதாக ஸ்டாலின் நினைப்பதாக தெரிகிறது. எனவே இந்த மக்களவை தேர்தலை உதயநிதியை வைத்து வெல்லலாம் என திமுக திட்டமிடுவதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிப்படுகிறது. மனுதாக்கல் செய்ய ஜூலை 18 கடைசி தேதி என்பதால் 10ம் தேதிக்குள் திமுக தனது வேட்பாளரை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.