வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 3 ஜூலை 2019 (14:23 IST)

கோலாகலமாக தொடங்குகிறது நெல்லையப்பர் கோவில் தேரோட்டம்

திருநெல்வேலியில் அருள்பாலிக்கும் அருள்மிகு நெல்லையப்பர் கோவிலின் ஆனித்தேரோட்டத்திற்கான பணிகள் தொடங்கியுள்ளன.

தமிழகத்தில் உள்ள முக்கியமான சிவ ஸ்தலங்களில் ஒன்று நெல்லையப்பர் ஆலயம். இங்கு ஆனி மாதத்தில் நடைபெறும் தேர் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. ஜூலை 14 தேர்பவனி நடக்க இருக்கும் நிலையில் தற்போது அதற்கான பணிகள் தொடங்க இருக்கிறது.
ஜூலை 6ம் தேதி கொடியேற்றம் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து ஓவொரு நாளும் கற்பக விருட்சம், வெள்ளிக் கமலம், தங்க பூத வாகனம், சிம்ம வாகனம், வெள்ளிக் குதிரை வாகனம், ரிஷப வாகனம் போன்றவற்றில் ஏறி நெல்லையப்பர் பக்தர்களுக்கு தரிசனம் அளிப்பார்.

ஜூலை 13, 14 ஆகிய தேதிகள்தான் நெல்லையப்பர் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள் நடக்கும்.

ஜூலை 13 அன்று காலையில் சுவாமி வெள்ளை சாத்தி எழுந்தருளும் நிகழ்வும், மாலையில் கங்களநாதர் தங்க பல்லக்கில் வீதி உலாவும் நடைபெறும். இரவு சுவாமி தங்க கைலாய வாகனத்திலும், அம்பாள் தங்க கிளி வாகனத்திலும் வீதி உலா வரும் சிறப்பு நிகழ்வு நடைபெறும்.

விழாவின் உச்சபட்ச நிகழ்வான ஆனித்தேர் ஜூலை 14ல் நடைபெறும். இதற்கான பாதுகாப்பு பணிகள் இப்போதிலிருந்தே துரிதப்படுத்தப்பட்டுள்ளன. தேர் அலங்கார பணிகள் முழுவேகத்தில் செய்யப்பட்டு வருகின்றன.

நெல்லையப்பர் திருத்தேர் உலாவை காண தமிழகம் முழுவதிலிருந்தும் பக்தகோடிகள் வருகை புரிவதால் அதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சிறப்பு பேருந்துகள், குடிநீர், கழிவறை வசதி ஆகியவை முன் கூட்டியே ஏற்படுத்தப்பட்டுள்ளன.