1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 18 டிசம்பர் 2021 (11:21 IST)

தமிழ்த்தாய் வாழ்த்து… முழுப்பாடலையும் மாநிலப் பாடலாக அறிவிக்கவேண்டும்- வானதி சீனிவாசன்!

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மாநிலப் பாடலாக அறிவித்து அந்த பாடல் பாடப்படும்போது அனைவரும் எழுந்து நிற்கவேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து பாஜக மகளிர் அணித் தலைவியும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘கவிஞர் மனோன்மணீயம் சுந்தரனார், ‘தமிழ்த் தெய்வ வணக்கம்’ என்ற தலைப்பில் எழுதிய பாடல்கடந்த 1970-ம் ஆண்டு முதல் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக தமிழகத்தில் அரசு விழாக்கள், நிகழ்ச்சிகளில் பாடப்பட்டு வருகிறது. தற்போது இந்தப் பாடலை தமிழக அரசின் மாநில பாடலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மோகன ராகத்தில் 55 வினாடிகளில் பயிற்சி பெற்றவர்களால் பாடப்பட வேண்டும் என்றும், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடும்போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை முழுமனதோடு வரவேற்கிறேன்.

ஆனால், மனோன்மணீயம் சுந்தரனார் எழுதிய பாடலில் ஒரு பகுதியை மட்டுமே தமிழ்த்தாய் வாழ்த்தாக அன்றைய முதல்வர் மு.கருணாநிதி அறிவித்தார். ‘தமிழ்த் தெய்வ வணக்கம்’ என்ற பாடலில் உள்ள குறிப்பிட்ட சில வரிகள் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலில் இடம்பெறவில்லை. அவற்றில் கடவுள் பற்றிய வரிகள் வருவதாலேயே நீக்கப்பட்டுள்ள தாகத் தெரிகிறது. மனோன்மணீயம் சுந்தரனார் தமிழை தெய்வமாகத்தான் பார்க்கிறார். எனவே, மாநில பாடலாக அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலின் முழுப் பாடலையும் பாட வேண்டும்.முழுப் பாடலையும் மாநில பாட லாக அறிவிக்க வேண்டும் என முதல்வரை கேட்டுக் கொள்கிறேன்.’ எனக் கூறியுள்ளார்.