வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 21 மார்ச் 2020 (09:06 IST)

கொரோனாவால் 12 பேர் இறந்ததாக வதந்தி பரப்பிய இருவர் கைது!

இந்தியாவில் பிற மாநிலங்களில் கொரோனா தாக்கம் சற்று அதிகமாக இருந்தாலும் தமிழகத்தில் இதுவரை பெரிய அளவில் தாக்கம் இல்லை. கொரோனாவால் மூன்று பேர் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டிருந்தாலும், அவர்களது உடல்நிலை தற்போது கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தற்போது குணமாகி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? என்பது குறித்த தகவல்களை அவ்வப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்திலும் பேட்டியிலும் தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழக எல்லைகளை அதிரடியாக மூட உத்தரவிட்டதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா பரவுவது பெருமளவு கட்டுப்படுத்தப்படும் வாய்ப்பிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 12 பேர் இறந்து போனதாக வதந்தியை சமூக வலைதளம் மூலம் பரப்பிய இருவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த சிவகுமார் என்பவரும் மலையகத்தைச் சேர்ந்த பெஞ்சமின் என்பவரும் சமூக வலைதளங்களில் நேற்று ஒரே நாளில் 12 பேர் கொரோனாவால் பலியாகி விட்டதாக பதிவு செய்துள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
 
இதனை அடுத்து அதிரடி நடவடிக்கை எடுத்த தமிழக போலீசார் வதந்தி பரப்பிய இருவரையும் கைது செய்தனர். மேலும் கொரோனா குறித்து வதந்தி பரப்புபவர்கள் மீதும், தவறான தகவல்களைப் பதிவு செய்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது