1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 9 செப்டம்பர் 2018 (18:04 IST)

7 பேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை : தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 27 வருடங்களுக்கும் மேல் சிறையில் வாடும் பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்ய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 
சமீபத்தில் இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 7 பேரின் விடுதலை குறித்து முடிவெடுக்க ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரைக்கலாம் என நீதிபதி கோகாய் என தீர்ப்பளித்தார். எனவே, தமிழக அரசு சட்டசபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 
 
இந்நிலையில், பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று மாலை அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் கூடியுள்ளது. இதில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பிஎஸ் மற்றும் அமைச்சர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். 

 
4 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் 2 மணி நேரம் நடந்து 6 மணிக்கு முடிவடைந்தது. அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், 7 பேரின் விடுதலை குறித்து அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார். அதன்படி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் சட்டப்பிரிவு 161ன் கீழ் விடுவிக்க ஆளுநருக்கு பரிந்துரைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
 
அதேபோல், தமிழக அரசின் முடிவை ஆளுநர் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அவர் இதை நிராகரிக்க முடியாது என அவர் தெரிவித்தார்.
 
இந்த அறிவிப்பு ராஜிவ் காந்தி வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருபவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.