1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 23 பிப்ரவரி 2022 (10:28 IST)

மக்கள் தேடி பிடித்து ஓட்டு போட்டிருக்கிறார்கள்! – திருமாவளவன் மகிழ்ச்சி!

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 93 இடங்களில் வி.சி.க வென்றுள்ளது குறித்து திருமாவளவன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள், அதிமுக, பாமக, பாஜக, மநீம, நாதக, விஜய் மக்கள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போட்டியிட்டன. நேற்று உள்ளாட்சி தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இந்த தேர்தலில் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி தென்னை மர சின்னத்தில் போட்டியிட்டது. தேர்தல் முடிவுகளில் மாநகராட்சியில் 16 வார்டுகள், நகராட்சியில் 26 வார்டுகள், பேரூராட்சிகளில் 51 வார்டுகள் என மொத்தம் 93 இடங்களில் விசிக வெற்றி பெற்றுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள விசிக தலைவர் திருமாவளவன் “கடந்த சட்டமன்ற தேர்தலில் ஒரு சின்னத்திலும், நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தென்னை மர சின்னத்திலும் என சின்னம் மாறினாலும் கூட மக்கள் தேடி வந்து வாக்களித்து வெற்றிபெற செய்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது” என கூறியுள்ளார்.