வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 26 ஜூன் 2019 (20:56 IST)

கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுன – போலீஸை கேவலமாக பேசிய நபர் என்னவானார் தெரியுமா?

சென்னையில் நீலாங்கரை பகுதியில் குடித்துவிட்டு காரில் சென்று மோதி விபத்து ஏற்படுத்தியதோடு, காவலர்களையும் ஆபாசமாக திட்டிய நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

திருவான்மியூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் நவீன். மதுரையை சேர்ந்தவரான இவர் வெளிநாடுகளுக்கு பழங்களை ஏற்றுமதி செய்யும் தொழிலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மது அருந்திவிட்டு வேகமாக காரை ஓட்டு வந்த நவீன் சாலையின் ஓரமாக நின்றிருந்த ஆட்டோவின் மீது மோதினார். கார் மோத வருவதை கவனித்த ஆட்டோ ட்ரைவர் மின்னல் வேகத்தில் வெளியே பாய்ந்து உயிர்தப்பினார். ஆட்டோ அப்பளமாய் நொறுங்கியது.

நீலாங்கரையில் காவலில் ஈடுப்பட்டிருந்த போலீஸ் உடனே காரை திறந்து உள்ளே சிக்கியிருந்த நவீனை வெளியே எடுத்தனர். வெளியே வந்த நவீன் போலீஸாரை வாயில் வந்தபடி கேவலமாக பேசினார். போலீஸ் எப்படியோ அவரை நீலாங்கரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். காலையில் போதை தெளிந்த நவீன் போலீஸார் காட்டிய வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். தன் தவறுக்கு மன்னிப்பும் கேட்டுள்ளார். அவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் நவீன் போலீஸாரை திட்டும் வீடியோ இணையத்தில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது கை முறிந்த நிலையில் நவீன் கட்டுப்போட்டு கொண்டு நிற்கும் புகைப்படம் போலீஸ் தரப்பிலிருந்து வெளியாகியுள்ளது. வீடியோவில் திட்டும்போது நன்றாக இருந்த நவீனின் கைகள் உடைந்தது எப்படி என நெட்டிசன்கள் சிலர் லாஜிக்காக கேள்வி கேட்க தொடங்கினர்.

இதுகுறித்து பேசிய போலீஸார் “மது போதையில் இருந்த நவீனை காவல் நிலையம் அழைத்து செல்ல முயன்றோம். அப்போது அவர் திமிறி கொண்டு சாலையில் விழுந்ததால் கையில் முறிவு ஏற்பட்டது. அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தோம். நவீனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்துச் செய்ய கோரியுள்ளோம். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நவீன் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்” என தெரிவித்துள்ளனர்.

”குடித்துவிட்டு போலீஸிடம் வம்பு பண்ணினால் இப்படிதான் அவ்ர்கள் இழுத்து போகும்போது……… தடுக்கி விழுந்து கை உடையும்” என நெட்டிசன்கள் கிண்டலாய் அந்த வீடியோவுக்கு கீழே பதிவிட்டுள்ளனர்.