1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By VM
Last Modified: வியாழன், 31 ஜனவரி 2019 (10:59 IST)

விசைப்படகால் பாம்பன் ரயில் பாலத்துக்கு ஆபத்து

ராமேசுவரம் பாம்பன் ரெயில் பாலத்தில்  பராமரிப்பு பணிகள் முடிந்த நிலையில் ராமேசுவரத்துக்கு இன்னும் ஓரிரு நாட்களில் பாம்பன் பாலம் வழியாக பயணிகள் ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது.


 
இந்த நிலையில்  நேற்று முன்தினம் இரவு பாம்பனை சேர்ந்த ரைஜன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு வடக்கு கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு இருந்தது.
 
திடீரென பலத்த காற்று மற்றும் கடல் அலையின் வேகத்தில் நங்கூரம் அறுந்ததால், அந்த படகு பாலத்தை நோக்கி அடித்து வரப்பட்டது. அந்த விசைப்படகு பாலத்தின் அருகில் உள்ள பாறையில் முட்டி நின்றது. பாலத்துக்கும், அந்த பாறைக்கும் மிகவும் குறைந்த இடைவெளி மட்டுமே உள்ளது. எனவே மீண்டும் பலத்த காற்று வீசினால் அந்த படகு அங்கிருந்து நகர்ந்து பாலத்தில் மோதும் அபாயம் உள்ளது.
 
எனவே அந்த படகை மீட்க மீனவர்கள் நேற்று காலை முதல் கடுமையாக போராடி வருகிறார்கள்.  எனினும் பலத்த காற்று மற்றும் கடல் அலையின் வேகம் காரணமாக  படகு மீட்கப்படவில்லை. தொடர்ந்து மீனவர்கள் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
 
இந்த படகு ரெயில் பாலத்தில் மோதும் ஆபத்து உள்ளதால் உடனடியாக கடலோர காவல்படை மூலம் அந்த படகை அதிகாரிகள் மீட்க வேண்டும் என்று மீனவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.