வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 28 மார்ச் 2018 (16:19 IST)

குக்கருக்காக உச்ச நீதிமன்றம் போன எடப்பாடி-ஓபிஎஸ் : காவிரி விஷயத்துக்கு?..

குக்கர் சின்னத்திற்காக உச்ச நீதிமன்றம் வரை சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஒ.பி.எஸ் ஆகியோர் காவிரி மற்றும் ஸ்டெர்லைட் விவகாரத்தில் ஏன் உச்ச நீதிமன்றத்தை அணுகவில்லை என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்கதமிழ்ச்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார்.

 
தினகரன் தரப்பிற்கு குக்கர் சின்னத்தை ஒதுக்குமாறு டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 9ம் தேதி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி-ஓபிஎஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டது.
 
இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள தங்க தம்ழிச்செல்வன் எம்.எல்.ஏ “எங்களைப் பார்த்து அவர்கள் பயப்படுகிறார்கள். குக்கர் சின்னத்தை தேர்தல் ஆணையம்தான் எங்களுக்கு ஒதுக்கியது. அந்த சின்னத்தை வைத்து ஆர்.கே.நகரில் வெற்றி பெற்றோம். இதற்காக உச்ச நீதிமன்றம் வரை சென்று செல்ல வேண்டிய அவசியம் ஓ.பி.எஸ்- எடப்பாடிக்கு இல்லை. மக்களை சந்தித்து ஓட்டு கேட்போம். மக்கள் அவர்களுக்கு பிடித்தமானவர்களுக்கு ஓட்டுப் போடுவார்கள். 

 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கெடு முடியவுள்ளது. மக்களின் வாழ்வாதார பிரச்சனை அது. அதற்காக உச்ச நீதிமன்றம் செல்லாமல், அதற்கு துப்பில்லாமல் குக்கர் சின்னத்துக்காக உச்ச நீதிமன்றம் சென்றுள்ளனர். நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக இவர்கள் எதுவும் செய்யவில்லை. இவர்கள் சுயநலவாதிகள்” என கோபமாக கூறியுள்ளார்.