1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 26 ஜூலை 2020 (15:15 IST)

24 மணி நேரத்தில் கனமழை; மீனவர்களுக்கு எச்சரிக்கை! – வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் பல்வேறு பகுதியில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது.

இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் நாகப்பட்டிணம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும், சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் ஜூலை 28ல் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் அப்பகுதி மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேபோல தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல்பகுதியில் ஜூலை 29 மற்றும் 30 தேதிகளில் கடலுக்குள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.