வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 12 ஏப்ரல் 2019 (11:39 IST)

மீண்டும் பல்பு வாங்கிய வேதாந்தா நிறுவனம்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியளிக்க கோரிய மனுவை  உச்சநீதிமன்றம் மீண்டும் அதிரடியாக நிராகரித்துள்ளது.
 
தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை வெளியேற்றும் கழிவுகள் காரணமாக, சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என மக்கள் போராட்டம் நடந்தபோது கலவரம் ஏற்பட்டு, 13 அப்பாவி பொதுமக்கள் போலீஸாரால் சுட்டு கொல்லப்பட்டனர். 
 
இதனையடுத்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டது. அதன்படி ஆலையும் மூடப்பட்டது. இதனை எதிர்த்து ஆலை நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த தேசிய பசுமை தீர்ப்பாயம்,  ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டது.  இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இதுகுறித்து விசாரித்த உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க சொல்ல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்கு எந்த ஒரு அதிகாரமும் இல்லை, தமிழக அரசாணையை எதிர்க்கவும், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்கு உரிமையில்லை.  இனி ஸ்டெர்லைட் நிர்வாகம், சென்னை உயர்நீதிமன்றத்தை நாடி இவ்வழக்கை சந்தித்துக் கொள்ள உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.
 
ஆனால் மீண்டும் வேதாந்தா நிறுவனம், நிர்வாகப்பணிகளை மேற்கொள்ள ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இன்று இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், வேதாந்தாவின் கோரிக்கையை நிராகத்து உத்தரவிட்டது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும்  எனவும் கூறியிருக்கிறது.