1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 9 மே 2024 (18:46 IST)

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடிவிபத்து.. 8 பேர் உயிரிழப்பு.. தமிழக அரசுக்கு சரத்குமார் வேண்டுகோள்..!

sarathkumar
சிவகாசி பட்டாசு ஆலையில் வெடிவிபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில் தமிழக அரசுக்கு சரத்குமார் வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: 
 
சிவகாசியில் பட்டாசு ஆலை வெடிவிபத்து விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே
செங்கமலப்பட்டியில் பட்டாசு ஆலையில் இன்று நேர்ந்த துரதிர்ஷ்டவசமான வெடிவிபத்தில், பட்டாசுத் தொழிலாளர்கள் 5 பெண்கள் உட்பட 8 பேர் உயிரிழந்தும், 11 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடிய நிலையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் மிகுந்த மனவேதனையளிக்கிறது.
 
பட்டாசு ஆலையில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் வெடி விபத்துகளில் உயிரிழப்பதும், வெடிவிபத்துக்களும் நடைபெற்று வருகிறது. இது போன்ற சோக சம்பவம் நடைபெறாமல் இருக்க பட்டாசு ஆலை உரிமையாளர்கள் உரிய பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்தாலும், துரதிர்ஷ்டவசமாக ஏற்படும் மனித உயிரிழப்புகளை தவிர்ப்பதற்கு தொழில்நுட்ப வசதிக்கேற்ப பாதுகாப்பு நெறிமுறைகளை எவ்வாறு அதிகரிக்க வேண்டும் என்பதை தமிழக அரசு தீர ஆராய்ந்து நிரந்தரத் தீர்வு காணுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
 
உயிரிழந்த மற்றும் படுகாயமுற்ற தொழிலாளர்களின் குடும்பத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உரிய நிவாரணம் வழங்கவும் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.
 
உயிரிழந்தவர்களின் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைந்து பூரண நலம் பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
 
 
Edited by Mahendran