1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 12 ஜனவரி 2024 (17:32 IST)

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி..! 3-வது முறையாக தள்ளுபடி செய்தது நீதிமன்றம்..

senthil balaji
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
 
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் கைது செய்தனர். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு உத்தரவிட்டது. இதை அடுத்து அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இருமுறை தள்ளுபடி செய்துவிட்டது. 
 
இதனை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றமும், மருத்துவக் காரணங்களுக்காக ஜாமீன் தர முடியாது என கூறி அவருக்கு ஜாமீன் தர மறுப்பு தெரிவித்து விட்டது. மேலும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யுமாறும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
 
இதையடுத்து, செந்தில் பாலாஜி சார்பில் ஜாமீன் கோரி 3ஆவது முறையாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரிக்கப்பட்டு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்தது.
 
அதன்படி, அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது தீர்ப்பளித்த சென்னை முதன்மை நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் தர மறுப்பு தெரிவித்து. அவரது  ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 3-ஆவது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.