1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 13 ஏப்ரல் 2022 (08:53 IST)

அரசியலுக்கான நேரம் வந்துவிட்டது: வசனங்களை அள்ளி விடும் சசிகலா!

புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதா வழியில் மட்டும்தான் நான் செல்வேன் என சசிகலா பேட்டி.

 
அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லும் என சென்னை நீதிமன்றம் தீர்ப்பளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தீர்ப்பால் அதிர்ச்சியடைந்த சசிகலா, இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார். 
 
இதனைத்தொடர்ந்து சசிகலா சேலம், நாமக்கல், திருச்செங்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு தொண்டர்களை சந்திக்க இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அதிமுக இடத்தை பிடிக்க பாஜக முயல்கிறதா என கேட்டதற்கு அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். எனது அரசியல் பயணத்துக்கான நேரம் வந்துவிட்டது. 
 
அதிமுகவை யார் வழிநடத்த வேண்டும் என்பதை தொண்டர்கள் முடிவுசெய்வார்கள். தொண்டர்கள் அளித்து வரும் பேராதரவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதா வழியில் மட்டும்தான் நான் செல்வேன். எனக்கென தனி வழி எல்லாம் கிடையாது. என்னுடைய பணி மக்களுக்கானது. நிச்சயமாக நான் அதை செய்வேன் என கூறினார். 
 
முன்னதாக சிறையில் இருந்து விடுதலையாகி வந்ததும் அரசியலில் இருந்து விலகப்போவதாக அறிவித்த சசிகலா தற்போது அரசியலுக்கான நேரம் வந்துவிட்டது என பேட்டியளித்திருப்பது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை உண்டாக்கியுள்ளதாக தெரிகிறது.