1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 25 ஏப்ரல் 2024 (10:25 IST)

மணல் குவாரி வழக்கு..! ED விசாரணைக்கு 5 ஆட்சியர்கள் இன்று ஆஜர்..!

Lorry
மணல் குவாரிகளில் சட்டவிரோதமாக கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்த வழக்கில் 5 மாவட்ட ஆட்சியர்கள் இன்று அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகின்றனர்.
 
தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
 
இது தொடர்பாக அமலாக்கத் துறை மணல் குவாரி ஒபந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தியது. மணல் கொள்ளை முறைகேட்டில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு உள்ளது என அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டி 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பியது. 
 
திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்கள் மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. சம்மனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
 
இந்த வழக்கு கடந்த 2-ம்  தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், மக்களவைத் தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
 
இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள்,  மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் உத்தரவிட்டனர்.

 
இந்நிலையில் மணல் முறைகேடு வழக்கில் திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்கள் இன்று அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பபட்டுள்ளது. இதையடுத்து இன்று அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகின்றனர்.