1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 9 டிசம்பர் 2022 (11:34 IST)

தமிழகத்தின் எந்தெந்த பகுதிக்கு ரெட், ஆர்ஞ்ச், மஞ்சள் அலர்ட் தெரியுமா??

மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தின் எந்தெந்த பகுதியில் எவ்வளவு மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.


மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இன்று மாண்டஸ் புயல் மாமல்லபுரத்தில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காலை நிலவரப்படி சென்னையில் இருந்து 320 கீமி தொலைவிலும் காரைக்காலில் இருந்து 240 கீமி தொலைவில் மாண்டஸ் புயல் நிலைக்கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. புயலானது சென்னை தென் கிழக்கு பகுதியில் இருந்து மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது.

இதனிடையே இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தின் எந்தெந்த பகுதியில் எவ்வளவு மழை பெய்யும் என தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தருமபரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை முதல் அதி கனமழை பெய்யும் என ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.