1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Rajinikanth win 23 seat in loksaba election

ரஜினி கட்சி தொடங்கினால் 23 சீட் கன்பார்ம் - கருத்துக்கணிப்பில் தகவல்

Rajinikanth
நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்கி வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டால் அவருக்கு 23 சீட் கிடைக்கும் என ரிபப்ளிக் டிவி கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளது.

 
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ள விவகாரம், தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தான் ஆன்மீக அரசியலை முன்னெடுக்கப்போவதாகவும், தனிக்கட்சி தொடங்கி  வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார். மேலும், இன்னும் 6 மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்தாலும், அதை நான் சந்திப்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், நடக்கவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என அவர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில், ஒருவேளை அவர் தனிக்கட்சி தொடங்கி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டால் அவருக்கு எத்தனை சீட் கிடைக்கும் என ரிபப்ளிக் டிவி கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது.

 
அதில், ரஜினிக்கு அதிகபட்சமாக 33.7 சதவீத வாக்குகளை பெற்று 23 தொகுதிகளில் வெற்றி பெறுவார் எனவும், அவருக்கு அடுத்து 28.3 சதவீத வாக்குகளை பெற்று திமுகவிற்கு 14 சீட் கிடைக்கும் எனவும், ஆளும் அதிமுகவிற்கு 2 சீட் மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பாஜகவிற்கும், காங்கிரஸுக்கும் ஒரு சீட் கூட கிடைக்காது எனவும் கூறப்பட்டுள்ளது.
 
அதோடு, ரஜினி கட்சி தொடங்கினால் அவர் மற்ற கட்சிகளுக்கு கடும் போட்டியாக இருப்பார் எனவும், தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸுக்கு மட்டுமில்லாமல் அதிமுக, திமுகவிற்கும் அவர் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவார் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதேநேரம், ஒரு இடம் கூட கிடைக்காமல் போனாலும் பாஜகவிற்கு 8.9 சதவீத வாக்குகள் கிடைக்கும் எனவும், காங்கிரஸுக்கு 1.2 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என அந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
புதிய படத்தில் விக்னேஷ் சிவனோடு இணையும் சிவகார்த்திகேயன்