1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 29 டிசம்பர் 2017 (18:03 IST)

ரசிகர்களின் கவனத்திற்கு - ஒரு நடிகர் நாடகமாடுகிறார்

ரஜினி எங்கள் உயிர்; ரஜினி எங்கள் மூச்சு என கரகோசம் ஒரு புறம்!

வா! தலைவா வா! தலைவா வா! என கரகோசம் மறுபுறம் என இனிதே நடைபெறுகிறது ரஜினியுடன் ஆன அவர் ரசிகர்களின் சந்திப்பு. 
 
ஜெயலலிதாவின் துயிலும், கருணாநிதியின் மௌனமும், சில அரசியல் தரகர்களின் ஆலோசனை என அரசியல் சதுரங்கத்தில் ஏறக்குறைய பகடைகளை உருட்ட ஆரம்பித்து இருக்கிறார் ரஜினி. ஒரு அரசியல் பார்வையாளனாக, நான் ஐந்து  கேள்விகளை ரஜினி முன்பு வைக்கிறேன்.
 
எங்கே உங்கள் வீரம்? எங்கே உங்கள் விவேகம்?
 
ராகவேந்திர மடம் தமிழக களமும் அல்ல; உங்கள் ரசிகர்கள் மட்டும் ஒட்டு மொத்த தமிழகமும் அல்ல, பிறகு ஏன் இந்த பந்தா?  இயக்குனர் மகேந்திரனும், பஞ்சு அருணாச்சலமும் என சமூக விஞ்ஞானிகளா? மண்டபத்தில் என்ன மக்கள் பிரச்சனைகளையா விவாதித்து கொண்டிருக்கிறீர்கள்? ரஜினி அவர்களே! நீங்கள் என்ன தமிழகத்தை மீட்க வந்த மீட்ப்பரா? நீங்கள் உங்களையே மீட்ப்பராக கருதினால் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டி இருக்கலாமே? அங்கு ஏன் வேலை செய்யவில்லை உங்கள் வீரம்? உங்கள் விவேகம்? நீங்கள் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டி போட்டு இருந்தால் நோட்டாவிற்க்கும் உங்களுக்கும் தான் போட்டி இருந்திருக்கும்.
 
சீமானும்! நீங்களும்!
 
உங்களை வாழ வைத்த தெய்வங்களான எங்களுக்காக காவிரி பிரச்சனைக்காக, பண மதிப்பிழப்பீட்டால் மக்கள் எல்லாம் துயரபட்டப் போது,  ஜல்லிக்கட்டுக்காக, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து, நீட் தேர்வை எதிர்த்து குரல் கொடுத்தீர்களா? சமீபத்திய  இயற்கை சீற்றங்களால் தமிழக மக்கள்  துயர் பட்டப்போதாவது வாய்  திறந்தீர்களா? வாய் மூடி மௌனியாய் நீங்கள்! களத்தில் நாம் தமிழர்கள்! 
 
உங்கள் பிரிய நண்பர் விஜி என்ற விஜயகாந்த் 
 
காலம் தான் அரசியலையும் சினிமாவையும் தீர்மானிக்கிறது. உங்கள் சுயநலம் அல்ல தலைவரே! நீங்கள் சொல்லும் அதே சிஸ்டம் தான்.  ஜெயலலிதாவையும், கருணாநிதியையும் ஒரு சேர எதிர்த்தவர். அவர்களின் தவறுகளை சுட்டி காட்டியவர் உங்கள் பிரிய நண்பர் விஜி என்ற விஜயகாந்த். அப்போது எல்லாம் ஏன் மௌனம் ஆனீர்கள்  தலைவா?!
 
உங்கள் போதைக்கு ரசிகர்கள் ஊறுங்காயா?  
 
ரசிகர்களுக்கு கிடா விருது வைக்க ஆசைதான் என்றீர்கள். உண்மையில் நீங்கள் ஆடப்போகும் அரசியல் ஆட்டத்தில் உங்கள் ரசிகர்கள் தான் கிடாக்கள். திரையில் நீங்கள் நடித்ததிற்கு பணம் தந்தாகி விட்டது. சூட்டிங்கும் முடிந்து விட்டது ஆனால் நீங்கள் என்னவோ இன்னும் மயக்கத்திலே இருக்கிறீர்கள். நிழலால் எப்போது நிஜம் ஆகியிருக்கிறது ரஜினி சார்? உங்கள் தவறுகளை சமூக வலைத்தங்களில் விமர்ச்சிகவே கூடாது என்கிறீர்களா என்ன?
 
உங்களின் ரசிகர்களுக்கு!  
 
ஐந்தாவது கேள்வி உங்களுக்கு அல்ல உங்களின் ரசிகர்களுக்கு! நடிகர்களை நடிகராக பாருங்கள். தலைவனாய் பார்க்காதீர்கள்!

அவர்களுக்கும் தலைவன் நீங்கள்தான்! பிறகு ஏன் இந்த ஆர்ப்பாட்டங்கள்?

 
 
இரா காஜா பந்தா நவாஸ்