1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 5 ஜூன் 2020 (08:42 IST)

வரதட்சணை கொடுமை செய்த மாமியார்; மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திய மருமகள்!

புதுக்கோட்டையில் வரதட்சணை கொடுமை செய்த மாமியாரை மருமகளே மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் மணியம் பள்ளத்தை சேர்ந்தவர் ராஜாம்பாள். இவரது மகன் ரமேஷுக்கு பிரதீபா என்ற பெண்ணை கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளார். இவர்களுக்கு 9 மாத குழந்தையும் உள்ளது. இந்நிலையில் அடிக்கடி ராஜாம்பாளுக்கும், பிரதீபாவிற்கும் சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று 100 நாள் வேலைக்கு சென்று வந்த ராஜாம்பாள் வீட்டில் உறங்கி கொண்டிருந்தபோது அவர்மீது மண்ணெண்ணெயை ஊற்றி கொளுத்தியுள்ளார் மருமகள் பிரதீபா. முக்கால்வாசி உடல் முழுவதும் எரிந்த நிலையில் ராஜாம்பாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அதை தொடர்ந்து பிரதீபா கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் மாமியார் ராஜாம்பாள் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும், கணவருடன் வாழ இடையூறு செய்ததாலும் அவ்வாறு செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் புதுக்கோட்டை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.