1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 18 ஜூன் 2022 (10:59 IST)

அக்னிபத் திட்டம் - சென்னையிலும் வெடித்தது போராட்டம்!

அக்னிபாத் ராணுவ ஆளெடுப்பு திட்டத்திற்கு எதிராக சென்னை தலைமை செயலகம் அருகே இளைஞர்கள் போராட்டம். 
 
இந்திய ராணுவத்தின் முப்படைகளில் 4 ஆண்டுகால குறுகிய கால ராணுவ சேவை செய்வதற்கான “அக்னிபாத் திட்டம்” மத்திய அரசால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர இளைஞர்கள், பெண்கள் 18வயது முதல் 21 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். வழக்கமான ராணுவ உடற்தகுதி நிர்ணயங்களே அக்னிபாத் திட்டத்தில் சேர்பவர்களுக்கும் பொருந்தும். 
 
இந்த திட்டத்தின் கீழ் பணிபுரியும் வீரர்களுக்கு முதல் ஆண்டில் ரூ.4.76 லட்சம் ஆண்டு ஊதியமும், 4வது ஆண்டில் 6.92 லட்சம் ஆண்டு ஊதியமாகவும் வழங்கப்படும். 4 ஆண்டுகளை முழுவதுமாக முடிக்கும் வீரர்கள், வீராங்கனைகளுக்கு சேவை நிதியாக தலா ரூ.11.7 லட்சம் வழங்கப்படும்.
 
இந்த திட்டத்தில் இணைபவர்களுக்கான வயது வரம்பு 18 முதல் 23 வரை என்று கூறப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு ராணுவத்தில் இருந்த படியே பட்டப்படிப்பு படிப்பதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த திட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. 
 
தற்போது அக்னிபாத் ராணுவ ஆளெடுப்பு திட்டத்திற்கு எதிராக சென்னை தலைமை செயலகம் அருகே இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆரணி, கோவை, திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்த இளைஞர்கள் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக வேலூரிலும் போராட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனைத்தொடர்ந்து சென்னை போர் நினைவுச் சின்னம் முன்பு போராடிய இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைதான இளைஞர்களை பேருந்தில் ஏற்றி ராஜரத்தினம் மைதானத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.