1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 17 ஜூன் 2022 (13:52 IST)

அக்னிபத் போராட்டம் - குருகிராமில் 144 தடை உத்தரவு!

மத்திய அரசின் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களை அடுத்து, குருகிராமில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 
மத்திய அரசு அறிவித்துள்ள 4 ஆண்டுகால குறுகிய கால ராணுவ பணி வழங்கும் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. நேற்று முதலாக இந்தியா முழுவதும் போராட்டம் நடந்து வரும் நிலையில் பீகாரில் பயணிகள் ரயிலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். உத்தர பிரதேசத்தில் போராட்டத்தில் காவலர்கள், போராட்டக்காரர்கள் இடையே வன்முறை வெடித்தது.
 
இன்றும் நாடு முழுவதும் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராட்டம் தொடர்ந்து வருகிறது. நேற்று பீகாரில் ரயிலுக்கு தீ வைத்த நிலையில் இன்று தெலுங்கானாவின் செகந்திரபாத் ரயில் நிலையத்தில் நின்ற பயணிகள் ரயிலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர். தொடர்ந்து நடந்து வரும் இந்த தீ வைப்பு சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் மத்திய அரசின் அக்னிபத் போராட்டத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களை அடுத்து, ஹரியானா மாநிலம் குருகிராமில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் வகையில், நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கு முழு தடை விதித்துள்ளனர் அதிகாரிகள். நகரின் முக்கிய சந்திப்புகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.