சென்னை கடற்கரை மற்றும் செங்கல்பட்டு இடையே, குளிர்சாதன வசதியுடன் இயங்கவிருக்கும் மின்சார ரயிலின் உத்தேச அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
பெரம்பூரில் செயல்படும் ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த புதிய ஏசி புறநகர் ரயில், குறித்த வழித்தடத்தில் இயக்குவதற்கான தேவையான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இந்த ரயில் சேவை தொடங்கப்படுமானால், புறநகர் ரயில் சேவையில் முதல் ஏசி ரயிலாகும் என்ற சிறப்பை பெறும். 12 பெட்டிகள் கொண்ட இந்த ரயில், மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் பயணிக்கும்.
உத்தேச அட்டவணை
தாம்பரம் → சென்னை கடற்கரை
காலை 5:45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, காலை 6:45 மணிக்கு சென்னை கடற்கரையை அடையும்.
சென்னை கடற்கரை → செங்கல்பட்டு
காலை 7:00 மணிக்கு புறப்பட்டு, 7:48 மணிக்கு தாம்பரத்தையும், காலை 8:35 மணிக்கு செங்கல்பட்டையும் அடையும்.
செங்கல்பட்டு → சென்னை கடற்கரை
காலை 9:00 மணிக்கு செங்கல்பட்டிலிருந்து புறப்பட்டு, 9:38 மணிக்கு தாம்பரத்தையும், 10:30 மணிக்கு சென்னை கடற்கரையையும் அடையும்.
மதிய & மாலை நேர சேவை
பிற்பகல் 3:45 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து புறப்பட்டு, மாலை 4:20 மணிக்கு தாம்பரத்தையும், 5:25 மணிக்கு செங்கல்பட்டையும் அடையும்.
மாலை 5:45 மணிக்கு செங்கல்பட்டிலிருந்து புறப்பட்டு, 6:23 மணிக்கு தாம்பரத்தையும், 7:15 மணிக்கு சென்னை கடற்கரையையும் அடையும்.
இரவு 7:35 மணிக்கு கடற்கரையில் இருந்து புறப்பட்டு, 8:30 மணிக்கு தாம்பரத்தை அடையும்.
இந்த ரயில் வழக்கமான பாதையில் பயணிக்கும் போது கோட்டை, பூங்கா, எழும்பூர், மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, தாம்பரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, சிங்கப்பெருமாள் கோவில், பரனூர் ஆகிய ரயில் நிலையங்களில் மட்டுமே நிற்கும். மேலும், இந்த ரயில் வாரத்தில் ஞாயிறு தவிர மற்ற ஆறு நாட்கள் மட்டுமே இயக்கப்படும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
Edited by Mahendran