1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 11 ஜனவரி 2023 (11:23 IST)

பொங்கல் சிறப்பு பேருந்துகள்! எந்த ஊருக்கு எங்கிருந்து கிளம்பும்?

Pongal Bus
பொங்கல் பண்டிகைக்காக சென்னையிலிருந்து பல ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ள நிலையில் எந்தெந்த ஊர்களுக்கு எந்த பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் கிளம்பும் என பட்டியல் வெளியாகியுள்ளது.

பொங்கல் பண்டிகைக்காக சென்னையிலிருந்து பலரும் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு ஆயத்தமாகி வருகின்றனர். ஜனவரி 12 முதல் 14 வரை சென்னையிலிருந்து அனைத்து வழித்தடங்களிலும் ஏராளமான சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

அதன்படி பேருந்து செல்லும் இடங்கள் மற்றும் புறப்படும் இடம் குறித்த விவரங்கள்,

ஆந்திரா, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை செல்லும் பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் கே.கே.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும்

ஜிஎஸ்டி சாலை வழியாக திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி, கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் தாம்பரம் மெப்ஸ் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, போளூர், வந்தவாசி, செஞ்சி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி, திருப்பதி செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் புறப்படும்.

மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி, திருச்சி, அரியலூர், திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு, சேலம், கோவை, பெங்களூர், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை மற்றும் தென் மாவட்டங்கள் செல்லும் பேருந்துகள் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் புறப்படும்.

கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் முன்பதிவு செய்யப்பட்ட பேருந்துகள் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்லாது. அவை ஊரப்பாக்கம் வழியாக செல்லும். இதனால் தாம்பரம் – ஊரப்பாக்கம் இடையே இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

சென்னையிலிருந்து காரில் வெளியூர் செல்பவர்கள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்லாமல், அதற்கு பதிலாக திருக்கழுகுண்றம், செங்கல்பட்டு வழியாக செல்லவும், ஸ்ரீபெரும்புத்தூர், செங்கல்பட்டு வழியாக செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Edit By Prasanth.K