1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: வியாழன், 3 அக்டோபர் 2019 (09:27 IST)

லலிதா ஜுவல்லரியில் கைவரிசை காட்டியது “இவர்கள்” தான்.. காவல்துறை உறுதி

திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் கொள்ளை சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வந்த நிலையில், கொள்ளை கும்பலை போலீஸார் கண்டுபிடித்துவிட்டதாகவும், விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் உறுதியளித்துள்ளனர்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே, உள்ள பிரபலமான லலிதா ஜுவல்லரியின் கிளையில், ரூ.13 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளைப்போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை குறித்து மேலும் காவல்துறையினர் ஆய்வு நடத்தியதில், கடையின் பின்புறமுள்ள புனித ஜோசப் பள்ளிக்கும் கடைக்கும் இடையே ஒரே சுவர் என்பதால் பள்ளியின் வழியே பக்கவாட்டு சுவரில் ஒரு ஆள் நுழையும் அளவிற்கு துளையிட்டு கொள்ளையர்கள் உள்ளே புகுந்துள்ளதாகவும், இரவுப் பணியில் இருந்த 6 காவலாளிகளும் கடையின் முன்பக்கம் இருந்ததால் அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை எனவும், கூறப்படுகிறது.

அதன்பிறகு சிசிடிவி காட்சிகள் மூலம், பொம்மை முகமூடி அணிந்து 2 பேர் கடைக்குள் புகுந்து கொள்ளை அடித்திருப்பது தெரியவந்தது. மேலும் அதிகாலை 2.11 மணி முதல் 4.28 மணி வரை கொள்ளையர்கள் கடைக்குள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. கையுறைகளை அணிந்திருந்த அவர்கள், மோப்ப நாய் மோப்பம் பிடிக்காமல் இருக்க மிளகாய் பொடியையும் தூவிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. கடை அமைந்திருக்கும் பகுதியில் எந்த சிசிடிவி கேமராக்களை பொறுத்தப்பட்டிருக்கவில்லை எனவும் தெரியவருகிறது.

இந்நிலையில் இது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்ட போலீஸார், நகைகடையில் தங்களது கைவரிசையை காட்டியது, வடமாநிலத்த கொள்ளையர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இரு நாட்களில் அக்கொள்ளையர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் போலீஸார் உறுதியளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தின் பிரபலமான ஜுவல்லரியான லலிதா ஜுவல்லரியில், பலத்த காவலுக்கு ஆட்கள் இருந்தும், எதிர்பாராதவிதமாக ரூ.13 கோரி மதிப்பிலான நகைகள் கொள்ளை போன சம்பவம் அப்பகுதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.